Rajendra Balaji: கேரளாவில் ராஜேந்திர பாலாஜி பதுங்கி உள்ள இடம்..? ஸ்மெல் பண்ணிய தனிப்படை...
கேரளாவில் ராஜேந்திர பாலாஜி பதுங்கிய இடத்தை தனிப்படை கண்டுபிடித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருவனந்தபுரம்: கேரளாவில் ராஜேந்திர பாலாஜி பதுங்கிய இடத்தை தனிப்படை கண்டுபிடித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இப்படி நடக்குமா? என்று யாருமே நினைக்கவில்லை. மோடி எங்கள் டாடி என்று பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னே ஓட, அவரை தமிழக காவல்துறை விட்டேனா பார் என்று துரத்திக் கொண்டு இருக்கிறது.
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடமும் கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு வேலையும் தராமல் பணமும் தராமல் ஏமாற்றினார் என்பது தான் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு. இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடியானது.
அதன் பின்னர் தமிழக காவல்துறை தனிப்படை அமைக்க, வெள்ளிக்கிழமை முதல் தலைமறைவாக இருக்கிறார் ராஜேந்திர பாலாஜி. விருதுநகரில் அதிமுக போராட்டத்தில் இருந்து அப்படியே எஸ்கேப் ஆகி எங்கே போனார் என்று தெரியவில்லை.
மொத்தம் 6 தனிப்படைகள் தனித்தனியே முகாமிட்டு அவரை தேடி வருகிறது. சென்னை, தென்மாவட்டங்கள், வட மாவட்டங்கள், பெங்களூரு என தனிப்படைகள் விரைந்திருக்கின்றன. செல்போன் மூலம் தமது இருப்பிடத்தை ஸ்மெல் செய்துவிடுவார்கள் என்று சாதாரண பட்டன் போன் வைத்துக் கொண்டு அதில் புது சிம் போட்டு ராஜேந்திர பாலாஜி பயன்படுத்தி வருகிறார் என்று காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டு இருக்கிறது.
கிட்டத்தட்ட 3 நாட்களாக அவர் பதுங்கி இருக்கும் இடத்தை தேடிய தமிழக காவல்துறை இப்போது அதை கரெக்டாக கண்டுபிடித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது ராஜேந்திர பாலாஜி இப்போது கேரளாவில் பதுங்கி இருக்கிறாராம்.
உடல்நிலை பாதிப்பால் மாத்திரையும், கையுமாக இருக்கும் ராஜேந்திர பாலாஜி தாம் சிறைக்குள் போனால் உடல் நிலை மோசமாக பாதிக்கப்படும் என்று பயப்படுகிறாராம்.
கேரளாவில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு அங்கேயே ராஜேந்திர பாலாஜி பதுங்கி இருப்பதாக காவல்துறை தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அவர் எந்த மருத்துவமனையில் பதுங்கி இருக்கிறார் ராஜேந்திர பாலாஜியை நன்கு அறிந்த ஒரு சிலருக்கு தான் தெரியுமாம்… ஆகவே அவர்களை முழு கண்காணிப்பில் வைத்து ராஜேந்திர பாலாஜியை அலேக்காக தூக்கி வர காவல்துறை களம் இறங்கி இருக்கிறதாம்.
அதே நேரத்தில் முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வரக்கூடிய தருணத்திலேயே உஷாராக இருந்திருந்தால் ராஜேந்திர பாலாஜியை வெள்ளியன்றே உள்ளே வைத்திருக்க முடியுமாம். ஆனால் அசால்ட்டாக இருந்துவிட்டு இப்போது மாநிலம், மாநிலமாக தேடுவதாக காவல்துறை தரப்பில் இருந்தே அதிருப்தி குரல்கள் எழுந்து வருகிறது.
இது மட்டும் அல்லாமல் மனு தள்ளுபடியாகி கிட்டத்தட்ட 2 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் ராஜேந்திர பாலாஜியை ஏன் கைது செய்யவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் காவல்துறை உயரதிகாரிகளுக்கு செம டோஸ் விட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
காரணம்.. கடந்த காலங்களில் அமைச்சராக இருந்த போது ராஜேந்திர பாலாஜி பேசிய பேச்சுக்கள் அப்படிப்பட்ட ரகம் என்று அறிவாலயத்தை நன்கு அறிந்தவர்கள் கூறி வருகின்றனர். எந்தளவுக்கு விரைவாக கைது செய்ய முடியுமோ அந்தளவுக்கு நடவடிக்கை இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாம்… அதே நேரத்தில் ராஜேந்திர பாலாஜி நீண்ட நாள் காவல்துறை கண்காணிப்பு வளையத்தில் இருந்து தப்பிக்கவும் முடியாது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்…!!