மாறு வேடத்தில் டெல்லிக்கு தப்பிய ராஜேந்திர பாலாஜி..?? அவசரமாக தலைநகர் நோக்கி விரைந்தது தனிப்படை.
ஏறக்குறைய நான்கு மணி நேரத்தில் அவர் மாநில எல்லையை கடந்திருக்கிறார். அதன்பிறகு பெங்களூருவில் இருந்து மும்பை சென்றுள்ளது அந்த இனோவா கார். அதேபோல ஒரு தேசிய கட்சியின் பிரமுகர் உதவியுடன் தரைவழி பயணமாக டெல்லி சென்றுள்ளார் அவர்
பண மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை பிடிக்க தனிப்படை போலீசார் டெல்லி விரைந்துள்ளனர். ராஜேந்திர பாலாஜி டெல்லியில் உள்ளதாக தகவல் கிடைத்ததை அடுத்து தனிப்படை டெல்லி விரைந்துள்ளது.
அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி ராஜேந்திர பாலாஜி. செல்வி ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவில் அதிகம் பேசப்பட்ட அமைச்சர்களில் இவரும் ஒருவர். தான் அதிமுக அமைச்சர் என்பதையும் மறந்து முழுக்க முழுக்க தன்னை ஒரு பாஜக தொண்டர் போலவே அவர் காட்டிக் கொண்டார் என்பதே அதற்கு காரணம். ' மோடி எங்கள் டாடி ' ' எங்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் மேலே இருக்கிற (மோடி) ஆண்டவன் பார்த்துக் கொள்வான்' ' எங்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது ' ' ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை' ' எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ஸ்டாலினால் முதலமைச்சராக முடியாது' ' ஸ்டாலின் ஒத்தைக்கு ஒத்த வர தயாரா' என பல வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர் ராஜேந்திரபாலாஜி.
திமுக ஆட்சிக்கு வந்தால் முதலில் கைது செய்யப்படுவது ராஜேந்திரபாலாஜியாகத்தான் இருக்கும் என்றும், அப்போது கூறப்பட்டது. அந்த அளவிற்கு அவர் திமுக தலைவர் ஸ்டாலினை மிக மோசமாக, தரக்குறைவாக பேசி வந்தார் என்பதே அதற்கு காரணம். இந்நிலையில்தான் கே.டி ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்தார் என அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் தன்னை கைது செய்யக் கூடாது என ஜாமீன் கேட்டு ராஜேந்திரபாலாஜி மனு தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் அவரது மனுவை ரத்து செய்தததை அடுத்து, ராஜேந்திர பாலாஜி கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அதிமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அவர் தனது ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டு விட்டது என்பதை அறிந்தவுடன் கண்ணிமைக்கும் நேரத்தில் வேக வேகமாக அங்கிருந்து தலைமறைவானார். இந்நிலையில் அவர் எங்கு இருக்கிறார், யாருடன் இருக்கிறார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் பெங்களூருக்கு தப்பிச் சென்றுவிட்டதாகவும், சிலர் அவர் கேரளாவில் பதுங்கியுள்ளதாகவும், அவர் விருதுநகர் மாவட்டத்திலேயே பதுங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. போலீசார் இதுவரை பெங்களூருக்கும், கேரளா என பல மாநிலங்களுக்கு சென்று தேடியும் ராஜேந்திரபாலாஜி அகப்படவில்லை. அவர் ஸ்மார்ட்போனை பயன்படுத்தாமல் பழைய பட்டன் மாடல் செல்போனை உபயோகித்து வருவதாகவும், அதனால் அவர் எங்கு இருக்கிறார் என்பதை ட்ராக் செய்வதில் சிரமம் இருக்கிறது என்றும் போலீஸ் வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது.
ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அவரை கைது செய்ய வேண்டும் என எந்த முன்னேற்பாடும் செய்யாததால் போலீசார் ராஜேந்திரபாலாஜி கோட்டை விட்டு விட்டார் என்ற விமர்சனமும் காவல் துறை மீது இருந்து வருகிறது. விருதுநகரில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ராஜேந்திர பாலாஜி தனது ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டுவிட்டது என்பதை அறிந்ததும், வேகமாக தனது வீட்டிற்கு சென்றிருக்கிறார். அவர் எப்படியும் காரில்தான் வெளியில் வருவார் என போலீசார் அவரது வீட்டுக்கு வெளியில் காவல் காத்திருந்தனர். ஆனால் அவர் வழக்கமான வேட்டி சட்டையை தவிர்த்து லுங்கி பனியன் உடுத்தி டாட்டா ஏஸ் வாகனத்தின் மூலம், கிளீனராக மாறி வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். அதே வாகனத்தின் மூலம் ஆனைக்குட்டம் அணை, புதுப்பட்டி, மங்கலம் வழியாக பயணித்து எரிச்சநந்தம் பகுதியில் பட்டாசு கம்பெனியின் அதிபர் ஒருவரின் இனோவா கார் மூலம் அழகாபுரி விளக்கு வழியாக மூணாறு சென்றுள்ளார்.
ஏறக்குறைய நான்கு மணி நேரத்தில் அவர் மாநில எல்லையை கடந்திருக்கிறார். அதன்பிறகு பெங்களூருவில் இருந்து மும்பை சென்றுள்ளது அந்த இனோவா கார். அதேபோல ஒரு தேசிய கட்சியின் பிரமுகர் உதவியுடன் தரைவழி பயணமாக டெல்லி சென்றுள்ளார் அவர். அங்கு அவரை பாதுகாத்து வருவது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அந்த தேசிய கட்சியின் பெண் நிர்வாகி என கூறப்படுகிறது. முன்னதாக சிவகாசி மாவட்டத்தில் உள்ள சில அரசியல் தொடர்புள்ள காக்கிகள் அவர் தப்பிப்பதற்கு முந்தைய நாள் அவரிடம் செல்போனில் பேசியுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் பண மோசடி புகார் கொடுத்தவர்களிடம் பேசி அவர்களிடம் பணத்தை திருப்பி கொடுத்து விட்டு பிறகு ஜாமீன் கோரினார் ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதனால், ராஜேந்திர பாலாஜிக் கெதிராக பண மோசடி புகார் கொடுத்தவர்களிடம் அவரது வழக்கறிஞர் தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதே நேரத்தில் இன்னும் பழைய போலீஸ் டெக்னிக்கை காவல்துறை பயன்படுத்துகிறது என்றும், இன்னும் அவரது செல்போனையே போலீசார் வட்டமடித்து வருகின்றனர் என்றும், ஆனால் அவரிடம் தொடர்பில் இருந்தவர்களை போலீஸ் கண்காணிக்கவில்லை என்றும் போலீஸ் மீது குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ராஜேந்திர பாலாஜி தப்பிக்க முழு காரணமும் மாவட்ட காவல்துறை என கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் ராஜேந்திரபாலாஜி இதோ பெங்களூரில் இருக்கிறார், அதோ கேரளாவில் இருக்கிறார் எனக் கூறி வந்த போலீஸார் தற்போது அவர் டெல்லியில் தஞ்சம் அடைந்து இருக்கிறார் என்பதை அறிந்து அவரைப் பிடிக்க தனிப்படை டெல்லி விரைந்துள்ளனர். இந்தமுறையும் போலீசார் கே.டி ராஜேந்திர பாலாஜியை கைது செய்வார்களா என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.