புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியின் லெட்சணத்தை ஒரேயொரு மழை அம்பலப்படுத்திவிட்டது..! ராஜீவ் சந்திரசேகர் அதிரடி
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி லெட்சணத்தை ஒரு மழை அம்பலப்படுத்திவிட்டது என்றும், புதுச்சேரிக்கு புதிய அரசாங்கம் தேவை என்றும் ராஜ்ய சபா பாஜக எம்பி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழப்போகிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர். அவர்களில், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், மற்றும் எம்எல்ஏ தீப்பாய்ந்தான் இருவரும் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.
இதையடுத்து, ஆளும் காங்கிரஸ் அரசு தனது பெரும்பான்மையை இழந்துவிட்டதாகக் கூறி, சட்டமன்றத்தில் நம்பிக்கை கணக்கெடுப்பு நடத்த எதிர்க் கட்சியினர் துணைநிலை ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வரும் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்ற தமிழிசை சௌந்தரராஜன், வரும் 22ம் தேதி நாராயணசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே, புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணனும் இன்று ராஜினாமா செய்துள்ளார்.
புதுச்சேரி மீனவர் பகுதியான சோலை நகருக்கு ராகுல் காந்தி சென்றபோது, புயலின்போது கூட காங்கிரஸ் எம்.எல்.ஏக்களோ, முதல்வர் நாராயணசாமியோ தங்களை கண்டுகொள்ளவில்லை என்று கூறியதை, ராகுல் காந்தியிடம் தவறாக மொழிபெயர்த்தார் முதல்வர் நாராயணசாமி. அப்போது வெளிப்பட்டது அவரது குட்டு. அதிலிருந்தே நாராயணசாமிக்கு கெட்டகாலம் ஆரம்பித்துவிட்டது. காங்கிரஸ் கட்சி புதுச்சேரியில் ஆட்சியை இழக்கப்போகும் நிலையில், புதுச்சேரியில் ஆட்சியை பிடிக்க தீவிரமாக செயல்பட்டுவருகிறது பாஜக.
காங்கிரஸ் ஆட்சியை விமர்சிக்க ஏதுவாக, புதுச்சேரியில் மழையும் கொட்டித்தீர்க்க, அதில் மக்கள் படுமோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் நேற்றிரவிலிருந்து கனமழை பெய்வதால் தாழ்வான பகுதிகளான இந்திரா காந்தி சதுக்கம், ராஜீவ்காந்தி சதுக்கம், ஈசிஆர் சாலை சிவாஜி சிலை உள்ளிட்ட தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. ரெயின்போ நகர், வெங்கட்டா நகர், லாஸ்பேட்டை, கிருஷ்ணா நகர், சாரம், காமராஜர் நகர், பாவாணர் நகர் உள்ளிட்ட இடங்களில் மழைவெள்ளத்தால் மக்கள் நடந்து செல்லவும் முடியாமல் தவித்தனர். 1000க்கும் அதிகமான வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் பெரும் அவதிக்கும் பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து டுவீட் செய்துள்ள ராஜ்ய சபா எம்பி ராஜீவ் சந்திரசேகர், புதுச்சேரியை காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகளில் எப்படி சீரழித்திருக்கிறது, காங்கிரஸ் ஆட்சியில் செய்யப்பட்ட ஊழல்கள், அடிக்கப்பட்ட கொள்ளைகள் ஆகியவற்றை ஒரேயொரு மழை மக்களுக்கு அம்பலப்படுத்தியுள்ளது. புதுச்சேரிக்கு புதிய அரசாங்கம் தேவை என்று ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.