நகைக் கொள்ளையன் நாதுராம் கைது….ராஜஸ்தான் போலீஸ் அதிரடி!!
சென்னை கொளத்தூர் நகைக்கடை கொள்ளை மற்றும் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த கொள்ளையன் நாதுராம் குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்டான்.
சென்னை கொளத்தூர் நகைக்கடையில் 3.5 கிலோ தங்கநகை கொள்ளை தொடர்பாக குற்றவாளி நாதுராமை தேடி சென்னையை சேர்ந்த தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்றனர்.
டிசம்பர் 12-ம் தேதி அதிகாலை நாதுராம் மற்றும் அவனின் கூட்டாளிகளை பிடிக்க முயன்றபோது மதுரவாயில் ஆய்வாளர் பெரியபாண்டியனை நாதுராம் துப்பாக்கியால் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என முதலில் கூறப்பட்டது. ஆனால் பெரியபாண்டியனை சுட்டது உடன் சென்ற முனிசேகர் என்பது தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பெரியபாண்டியின் உடல் தமிழகம் கொண்டவரப்பட்டது. அவரது உடலுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர், திதிமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர், இதைத் தொடர்ந்து பெரிய பாண்டியின் உடல் அவரது சொந்த ஊரான சங்கரன்கோவில் அருகே அடக்கம் செய்யப்பட்டது.
இதுகுறித்து ராஜஸ்தான் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தப்பியோடிய குற்றவாளி நாதுராமை கடந்த ஒரு மாத காலமாக ராஜஸ்தான் போலீசார் தேடி வந்தனர்.
இதனிடையே கடந்த வாரம் நாதுராம் தனது பேஸ்புக் பக்கத்தில் கையில் துப்பாக்கியுடன் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவு செய்திருந்தான்
.இந்நிலையில், குஜராத்தில் பதுங்கியிருந்த நாதுராமை குஜராத்தில் ராஜஸ்தான் மாநில தனிப்படை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர். இந்த தகவலை பாலி மாவட்ட எஸ்.பி. தீபக் பார்கவ் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து நாதுராமை சென்னை கொண்டவர தமிழக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.