இபிஎஸ் தலைமையை ஏற்றுக்கொண்டால் அதிமுகவில் சசிகலா இணையலாம்..? மூத்த நிர்வாகியின் திடீர் அறிவிப்பால் பரபரப்பு
சசிகலா, டி.டி.வி தினகரன் இருவரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்றுக் கொண்டால் அவர்களை கட்சியில் இணைப்பது தொடர்பாக தலைமை முடிவு செய்யும் அதிமுக மூத்த நிர்வாகியும் எம்.எல்.ஏவுமான ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் உள்ள முதல் 10 பிரச்சனைகளை பட்டியலிட்டு மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து மதுரை திருப்பரங்குன்றம் மற்றும் மேலூர் தொகுதிகளின் 10 பிரச்சினைகள் அடங்கிய பட்டியலை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் எம்.எல்.ஏ க்கள் வி.வி.ராஜன் செல்லப்பா மற்றும் பெரியபுள்ளான் (எ) செல்வம் ஆகியோர் வழங்கினார்கள், இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராஜன் செல்லப்பா, திருப்பரங்குன்றத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்து 120 நாட்கள் ஆகியும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லையென தெரிவித்தார். அதே போல மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் பணி, பாதாள சாக்கடை திட்டப் பணி என ஏராளமான பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளதாகவும் விமர்சித்தார்.
தவறான வழியில் ஓபிஎஸ்
சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வினால் திமுகவை மக்கள் ஏற்றுக் கொள்ள முடியாத சூழலில் உள்ளனர், மகளிர் இலவச பேருந்துகளில் ஏறுவதற்கு பெண்கள் மணிக்கணக்கில் காத்திருக்கிறார்கள், பயனற்ற பேருந்துகள் மட்டுமே இலவச பேருந்துகளாக இயக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். தமிழக அரசு மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை எதும் செய்யவில்லை, அதிமுக அரசு காலகட்டத்தில் கொண்டு வந்த திட்டங்களை தான் முதல்வர் தற்போது திறந்து வைத்து வருகிறார், ஒ.பி.எஸ் இனி எந்தவொரு தவறான வழிக்கும் செல்ல மாட்டார் என நினைக்கிறேன், ஒ.பி.எஸ் உடன் இருப்பவர்கள் அவரை தவறான வழிக்கு அழைத்து செல்லுவதாகவும் கூறினார். ஏற்கனவே தவறான வழியில் பயணித்து விட்டு என்ன செய்வதனே தெரியாமல் ஓ.பன்னீர் செல்வம் குழப்பத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இபிஎஸ் தலைமையை ஏற்க வேண்டும்
ஓ.பி.எஸ்க்கு திமுகவுடன் தொடர்பு இல்லை என நிரூபித்தால் அதிமுக சேர்ப்பதை பற்றி நினைக்கலாம், ஆனால் அதற்கு தற்போதைய காலகட்டத்தில் நடைபெற வாய்ப்பு இல்லையென தெரிவித்தார். சசிகலா, டி.டி.வி தினகரன் இருவரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்றுக் கொண்டால் அவர்களை கட்சியில் இணைப்பது தொடர்பாக தலைமை முடிவு செய்யும், அதிமுகவை இனி யாரின் தயவும் தேவையில்லை, அதிமுக மிக வலுவாக உள்ளது, எங்கள் தரப்பில் சொல்லுவதை மக்கள் நம்புவதாக தெரிவித்த அவர், ஒ.பி.எஸ் சொல்லுவதை மக்கள் நம்பவில்லை" என ராஜன் செல்லப்பா கூறினார்.
இதையும் படியுங்கள்
காங்கிரசில் சீமான் இணையட்டும் ... அப்புறம் பேசட்டும்....! எகிறி அடித்த நாரயணசாமி