Rahul Gandhi: ரூ. 164 கோடியை ஆட்டையப் போட்டது யாரு..? கேள்வியால் உலுக்கி எடுக்கும் ராகுல் காந்தி..?
பாரத ஸ்டேட் வங்கி ரூ.90 கோடியை ஜன்தன் வங்கி பயனர்களுக்குச் செலுத்தியது. ஆனால், அதில் எஞ்சிய ரூ.164 கோடியை இன்றுவரை திருப்பி அளிக்கவில்லை.
ஜன்தன் வங்கிக் கணக்கில் ரூ.164 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருக்கிறார்.
2014-ஆம் ஆண்டில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைந்த பிறகு, பிரதமர் மோடி ஏழை, எளிய பெண்களுக்கு ஜன்தன் வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டத்தை அறிவித்தார். இத்திட்டத்தின் படி ஏழை, எளிய பெண்கள் பெயரில் கணக்குகளை பொதுத் துறை வங்கிகள் தொடங்கின. இத்திட்டத்தில் தொடங்கும் கணக்குகள் ஜீரோ பேலன்ஸ் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில் வங்கி பரிமாற்றக் கட்டணமும் கிடையாது என்றும் கூறப்பட்டது. ஆனால், இந்தத் திட்டத்தில் வங்கிக் கணக்குத் தொடங்கிய ஏழை, எளிய மக்களிடமிருந்து பணப் பரிமாற்றக் கட்டணம் என்ற பெயரில் பாரத ஸ்டேட் வங்கி ரூ.164 கோடியை எடுத்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக மும்பை ஐ.ஐ.டி. அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், “பிரதமர் மோடியால் கடந்த 2015-ஆம் ஆண்டில் ஜன்தன் வங்கிக் கணக்குகள் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி வங்கிக் கணக்குத் தொடங்கியவர்களுக்குக் குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டது. இந்தக் கணக்குப் பயனாளர்களின் டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு கட்டணம் எடுக்கப்படாமல் இருந்தது. ஆனால், நான்கு முறைக்கு மேல் டிஜிட்டல் பரிமாற்றங்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி பணம் எடுத்திருக்கிறது.
ஜன்தன் வங்கிக் கணக்கு பயனாளி ஒருவரின் முதல் 4 டிஜிட்டல் பணப் பரிமாற்றத்திற்குக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. ஆனால் 5-ஆவது முறை பணப் பரிமாற்றம் செய்யும்போது ரூ.17.70 வசூலிக்கப்பட்டிருக்கிறது. இப்படி அடுத்தடுத்த ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. ந்த அளவில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் வரை மட்டும் ரூ.250 கோடியை பாரத் ஸ்டேட் வங்கி வசூலித்திருக்கிறது. இதுபற்றிய தகவல் மத்திய அரசு அறிந்ததும், வசூல் செய்யப்பட்ட பணத்தை உடனே பயனாளர்களுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து பாரத ஸ்டேட் வங்கி ரூ.90 கோடியை ஜன்தன் வங்கி பயனர்களுக்குச் செலுத்தியது. ஆனால், அதில் எஞ்சிய ரூ.164 கோடியை இன்றுவரை திருப்பி அளிக்கவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை ஐ.ஐ.டியின் இந்த அறிக்கையைச் சுட்டிக்காட்டி, ஜன்தன் வங்கிக் கணக்கு திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக வெளியான செய்தியை ட்விட்டரில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, ‘கொள்ளை’ என்ற ஹாஷ்டேக்கில், “மக்களின் பணத்தை 'கணக்கு' போடுவது யார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.