மோடிக்கு போட்டியாக களமிறங்கிய ராகுல் காந்தி..!! அதிரடி ஆரம்பம்..!!
கொரோனா விவகாரத்தில் அரசு எடுக்க தவறிய விஷயங்கள் என ராகுல்காந்தி வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வந்தார்.
இந்திய பிரதமர் மோடி மாதந்தோறும் "மன் கி பாத்"(மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார், அதேபோல ஒரு நிகழ்ச்சியை நடத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்டத்து 99 ஆயிரத்து 785 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் அது இரண்டு லட்சத்தை எட்டக் கூடும் என அஞ்சப்படுகிறது. அதேநேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 612 ஆக உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில் கொரோனா பட்டியலில் இந்தியா ஏழாவது இடம் பிடித்துள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் அது முதல் 5 இடங்களின் இடம் பிடிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் எந்த அளவுக்கு வேகம் எடுத்துள்ளதோ, அதற்கு இணையாக அரசியல் களமும் சூடு பிடித்திருக்கிறது. கொரோனா விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்கொத்தி பாம்பாக கவனித்து, சரியான நேரத்தில் அவசியமான விமர்சனங்களை காங்கிரஸ் முன்வைத்து வருகிறது. பிரதமர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ராகுல்காந்தி எதிர்வினை ஆற்றிவருகிறார். குறிப்பாக பிரதமர் மோடி மன் கி பாத் (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு மாதம்தோறும் உரையாற்றி வருகிறார், வானொலியில் ஒலிபரப்பு செய்யப்படும் இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தி வரும் ராகுல், டுவிட்டரில் மட்டும் சுமார் 14 லட்சத்து 40 ஆயிரம் பேரையும், பேஸ்புக்கில் 3 லட்சத்து 20 ஆயிரம் பேரையும் பாலோவராக கொண்டுள்ளார்.
இந்நிலையில், மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு காலத்தில், வெளிமாநில தொழிலாளர்கள் சந்தித்த பிரச்சினைகள், கொரோனா விவகாரத்தில் அரசு எடுக்க தவறிய விஷயங்கள் என ராகுல்காந்தி வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வந்தார். இது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது, இன்னும் பலர் ராகுல் காந்தி இதை தொடர வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில் சில நிபுணர்களின் கருத்துக்களை கேட்டறிந்துள்ள ராகுல் காந்தி, விரைவில் மக்கள் மத்தியில் உரையாடும் வகையில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக பிரதமர் மோடியின் மன் கி பாத்துக்கு இணையாக அந்த நிகழ்ச்சி இருக்குமென்றும், அதில் அவர் மட்டும் உரையாடாமல், அது ஒரு கலந்துரையாடல் வடிவில் இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர்.