Rahul Gandhi coronation as Congress President after gujarat election
குஜராத் சட்டசபை தேர்தல் முடிந்ததும், காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பு ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து தாமதம்
காங்கிரஸ் துணை தலைவராக இருக்கும் ராகுல், கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க உள்ளதாக வெகு நாட்களாக கூறப்பட்டு வருகிறது. ஆனால், ராகுலை கட்சி தலைவராக்கும் அறிவிப்பு தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் ராகுல் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியதும் கட்சி தலைமை பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்பட்டது. பிறகு அக்டோபரில் நடக்கும் கட்சி தேர்தலுக்கு பிறகு அறிவிக்கப்படுவார் என கூறப்பட்டது.
தேர்தல் அறிவிப்பால்...
கட்சியின் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் அக்டோபர் 12-ம் தேதி இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்தது.
இதனால் செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 15-க்குள் கட்சியின் தேர்தலை நடத்தி முடித்து, ராகுலை தலைவராக அறிவிக்கும் காங்கிரசின் முடிவு ஒத்திவைக்கப்பட்டது.
அறிவிப்பு எப்போது?
இதனால் ராகுல் எப்போது கட்சியின் தலைவராக அறிவிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தனது பாட்டியும், முன்னாள் பிரதமருமான இந்திராவின் பிறந்த நாளான நவம்பர் 19 அல்லது டிசம்பர் 18 க்கு பிறகு ராகுல், கட்சியின் தலைவராக அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
கருத்து கணிப்பு
ஒருவேளை நவம்பர் 19 அன்று ராகுலை தலைவராக அறிவித்தால், கட்சியின் தலைவர் என்ற அடையாளத்துடன் ராகுல் இமாச்சல் மற்றும் குஜராத் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டியது வரும்.
இதுவரை வெளியான கருத்துக் கணிப்புக்கள் இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெறுவது சந்தேகம் என கூறப்பட்டுள்ளது.
குஜராத் தேர்தலுக்குப் பின்..
இதனால் இரு மாநில தேர்தலிலும் காங்கிரஸ் தோற்றால் அதற்கு ராகுல் தலைவராக அறிவிக்கப்பட்டதே காரணம் என அவரை அனைவரும் விமர்சிக்க வாய்ப்பு உள்ளது. இமாசல பிரதேச தேர்தல் ஏற்கனவே முடிவடைந்து ஓட்டு எண்ணிக்கை தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
அடுத்து குஜராத் மாநில தேர்தல் முடிவடைந்ததும், டிசம்பர் 18-ம் தேதிக்கு பிறகு ராகுலை கட்சி தலைவராக அறிவித்துக் கொள்ளலாம் என காங்கிரஸ் மேலிடம் காத்திருப்பதாக கூறப்படுகிறது.
