ராஜீவ் கொலை குற்றவாளிகளை ராகுல் மன்னிப்பதில் சந்தேகம்...! பகீர் கிளப்பும் சு.சுவாமி!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திகொலை கொலை குற்றவாளிகளை ராகுல் காந்தி மன்னித்து விட்டதாக கூறுவது சந்தேகப்படும்படியாக உள்ளது என்று பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் கடந்த 25 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தாமும் தன்னுடைய சகோதரியும் முழுமையாக மன்னித்துவிட்டதாக கூறினார். மேலும் பிரபாகரனுக்காகவும் அவர்களது குழந்தைகளுக்காகவும் தான் வருந்தியதாகவும் தெரிவித்தார். ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு அரசியல் கட்சி தலைவர்களில் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சு குறித்து பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி, சில சந்தேகங்களை எழுப்பியுள்ளார். 'அவர்கள்' கொலை செய்தது ராஜீவ் காந்தியை அல்ல. நாட்டின் பிரதமரை. எனவே அவர்களை மன்னிக்க முடியாது. இலங்கை அரசு கேட்டுக் கொண்டதால் அவர்களுக்கு உதவி செய்ய இந்திய ராணுவம் சென்றது., எனவே அதை குற்றமாக கருத முடியாது. கூலிப்படை வைத்து ராஜீவ் காந்தியை கொன்றுள்ளனர். அதனால், அவர்களை ராகுல் குடும்பம் மன்னிக்க கூடாது.
இந்த விவகாரத்தில் விடுதலைப் புலிகளுடன் ஏதோ 'புரிதல்' உள்ளதாகவே தோன்றுகிறது என்று சு.சுவாமி சந்தேகம் எழுப்புகிறார். இது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். ராஜீவ் காந்தி கொலை குற்றவாளியான நளினியின் மகள் லண்டனில் படிக்கும் செலவை சோனியா காட்நதி குடும்பமே செய்து வருகிறது. அவர்கள் மீது ஏன் இவ்வளவு கரிசனம்? என்றும், இதில் ஏதோ ஒரு தவறு நடப்பதாக தான் சந்தேகப்படுவதாகவும் சுப்பிரமணிய சுவாமி கூறினார்.