Ragul gandhi press meet about SC jedges

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதிக்கு எதிராக 4 நீதிபதிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில் ஜனநாயகத்துக்கு ஆபத்து என்ற அந்த நீதிபதிகளின் கருத்துகளுக்கு முக்கியம் அளித்து இப்பிரச்சனையில் தலையிட வேண்டும் என்று பிரதம்ர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இந்திய வரலாற்றில் முதல்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், லோகுர் ஆகிய நால்வரும் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது உச்சநீதிமன்ற வளாகத்தில் கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருவதாகவும், இதே நிலை நீடித்தால் நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது எனவும் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிடம் தெரிவித்தும், சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும், அனைத்து முடிவுகளையும் தலைமை நீதிபதியே தனிப்பட்ட முறையில் எடுத்து வருகிறார். மற்ற நீதிபதிகளுக்கு அவர் வாய்ப்பு அளிக்க வேண்டும். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை நீக்குவது பற்றி மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று நால்வரும் கூட்டாக பேட்டியளித்தனர்.



நாட்டையே பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார் என கூறப்படுகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது, மூத்த நீதிபதிகள் முன் வைத்திருக்கும் கருத்துகள் மிக முக்கியமானவை என தெரிவித்தார்.

ஜனநாயகத்திற்கு ஆபத்து என்ற அந்த 4 நீதிபதிகளின் கருத்து மிகவும் முக்கியமானது என்றும் நீதியை விரும்பும் அனைத்து குடிமக்களும் இந்த பிரச்னை தீர்க்கப்பட வேண்டும் என விரும்புகிறார்கள் என்றும் ராகுல் தெரிவித்தார்.

அமித்ஷா மீதான போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோதா மரணம் குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ராகுல் வலியுறுத்தினார்..