தவறான பந்தயத்தில் வெற்றி பெறுவதற்கான பாதையில் இந்தியா பயணித்துவருகிறது, இது ஆணவம் மற்றும் திறமையின்மையின் விளைவால் ஏற்பட்ட ஒரு பயங்கரமான சோக நிகழ்வு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா விஷயத்தைப் பொருத்தவரை தவறான பந்தயத்தில் வெற்றி பெறுவதற்கு மோடி அரசு போராடிக் கொண்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இதுவரை நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,22,777 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,206 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 1,63,019 பேர் சிகிச்சைபெற்று குணமடைந்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சுமார் 1,50,552 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச அளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடம் பிடித்துள்ளது. கடந்த ஒரு சில வாரங்களில் இந்தியாவில் நோய்பாதிப்புகளின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு சராசரியாக 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. இதனால் மும்பை, டெல்லி, சென்னை போன்ற பெருநகரங்களில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 

இந்த அசாதாரணமான சூழ்நிலையை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சித்து உள்ளார், இதுகுறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், தவறான பந்தயத்தில் வெற்றி பெறுவதற்கான பாதையில் இந்தியா பயணித்துவருகிறது, இது ஆணவம் மற்றும் திறமையின்மையின் விளைவால் ஏற்பட்ட ஒரு பயங்கரமான சோக நிகழ்வு என்று அவர் குறிப்பிட்டுள்ளார். உலகளவில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் நான்காவது இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டும் வரைபடத்தையும் ராகுல்காந்தி டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.