பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பாதல் - அமைச்சரவை கலைக்கப்பட்டதாக ஆளுநர் அறிவிப்பு
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியையடுத்து, முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் நேற்று ராஜினாமா கடிதத்தை ஆளுநர் வி.பி.சிங் பட்நூரிடம் ஒப்படைத்தார்.
முதல்வர் பாதல் தலைமையில் கூடிய அமைச்சரவை, சட்டசபையை கலைக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்து கடிதத்தை அளித்தது. இதை ஏற்றுக்கொண்ட ஆளுநர் வி.பி.சிங் பட்நூர், பாதல் தலைமையிலான அமைச்சரவை கலைப்பட்டதாக முறைப்படி அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து, புதிய அரசு பதவி ஏற்க உள்ளது.
தேர்தல் வெற்றி
117 தொகுதிகளுக்கு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 77 இடங்களில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியைக் கைப்பற்றியது. அகாலிதளம், பாரதியஜனதா கூட்டணி 18 இடங்களில் மட்டுமே வென்று, ஆட்சியை பறிகொடுத்தது.
அறிவிப்பு
இதையடுத்து, முதல்வர் பிரகாஷ் சிங் பாதலும்(வயது89), துணை முதல்வரும் அவரின் மகனுமான சுக்பிர் சிங் பாதலும் நேற்று ஆளுநர் மாளிகைக்குச் சென்று, ஆளுநர் வி.பி.சிங் பட்நூரிடம் தங்கள் ராஜினமா கடிதத்தை அளித்தனர். அப்போது அடுத்த அரசு அமையும் வரை இடைக்கால முதல்வராக பாதலை இருக்க ஆளுநர் கேட்டுக்கொண்டார். அதன்பின் முறைப்படி அமைச்சரவை கலைக்கப்பட்டதாக அறிவித்தார்.
ராஜினாமா கடிதம்
முன்னதாக முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலா நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல், என்.கே. சர்மா, மதன் மோகன் மிட்டல், உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது 14-வது சட்டசபையை கலைக்கக் கோரி முடிவு ெசய்து ஆளுநருக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்பின், அதற்கான கடிதத்தை ஆளுநரிடம் முதல்வர் அளித்தார்.
நன்றி
ஆளுநரிடம் கடிதம் அளித்தபின், முதல்வர் பாதல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “ அடுத்த முதல்வராக பொறுப்பு ஏற்க இருக்கும் காங்கிரஸ் தலைவர் கேப்டன் அமிரிந்தர் சிங்குக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
தேர்தலில் ஏன் தோல்வி அடைந்தோம் என்பது குறித்து சுய ஆய்வு செய்வோம். மாநிலத்துக்கும், மக்களுக்கும் பணியாற்ற எனக்கும், எனது அமைச்சரவை குழுவுக்கும் வாய்ப்பு அளித்த மக்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன்'' என்றார்.