தற்போது ஆளுநர் தமிழிசை சூப்பர் முதல்வராகவும், ரங்கசாமி டம்மி முதல்வராகவும் உள்ளனர், தலையாட்டி பொம்மையாக ரங்கசாமி இருக்கிறார்' என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
புதுச்சேரிக்கு நிரந்தர துணைநிலை ஆளுநரை நியமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுதேசி மில் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டார். மேலும் புதுச்சேரியில் அதிகார அத்துமீறல் புரியும் பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை திரும்ப பெற வேண்டும் என்றும் போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, " புதுச்சேரியில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாலாறும் தேனாறும் ஒடும் என்றார்கள். மேலும் இந்தியாவிலே புதுச்சேரியை சிறந்த மாநிலமாக மாற்றிக்காட்டுவோம் என்றும் சூளுரைத்தார்கள். தேர்தலில் சமயத்தில் கொடுத்த எந்தவொரு வாக்குறுதியையும் செய்யவில்லை. மேலும் புதுச்சேரியில் ஆளுநர் தமிழிசை சூப்பர் முதல்வராகவும், ரங்கசாமி டம்மி முதல்வராகவும் உள்ளனர் என்று குற்றச்சாட்டினார்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுப்போம், பல்வேறு நிதியுதவியை வாரி வழங்குவோம், கடன் தள்ளுபடி செய்வோம் என்றெல்லாம் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடியு, அமித் ஷாவும் பேசினார். ஆனால் இதுவரை ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. மேலும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெறும் தலையாட்டி பொம்மையாக தான் இருக்கிறார் என்று விமர்சித்தார்.
காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்காக தான் துணை நிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டார் என்று தெரிவித்த அவர், என்.ஆர்.காங்கிரஸை மிரட்டி கூட்டணி அமைத்தது மட்டுமல்லாமல்,
காங்கிரஸில் இருந்து விலகி சென்ற 6 பேரை வைத்து பண பலம், அதிகார பாலத்துடன் என்ஆர் காங்கிரஸில் 10, பாஜக-வில் 6 என 16 பேர் வெற்றி பெற்று இப்போது ஆட்சி நடைபெற்று வருகிறது என்று கூறினார்.
ஆளுநர் தமிழிசை முதல்வராக இருந்து அனைத்து அரசு விஷயங்களிலும் தலையிட்டு வருவதாகவும் முதல்வர் ரங்கசாமி முதல்வராக இருக்கும் நாட்களை எண்ணிக்கொண்டிருப்பதாகவும் கூறினார். மேலும் இந்த ஆட்சி எவ்வளவு இருக்குமோ என்று சந்தேகழுப்பிய அவர், புதுச்சேரி அமைச்சர் 30% கமிஷன் வாங்குவதாக பகீர் கிளப்பினார். மேலும் கர்நாடகாவில் 40% கமிஷன் வாங்கிகிறார். ஆனால் இங்கு வெறும் 10 % மட்டும் தான் குறைவாக 30 சதவீதம் லஞ்சம் வாங்குவதாக கூறினார்.
நான் ஆட்சியில் இருந்த போது, மத்திய அரசிடமிருந்து 10 சதவீதம் நிதியை பெற்றிருந்த நிலையில், அதை விட வெறும் 1.4 சதவீதம் கூடுதலாக மட்டும் தான் மத்திய அரசிடமிருந்து ரங்கசாமியால் பெற முடிந்துள்ளது. எனவே புதுச்சேரி மாநிலத்தில் ஊழலை தவிர வேறொன்றும் நடக்கவில்லை என்றும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும் பேசினார்.
மேலும் எதற்காக நாங்கள் கிரண்பேடியை எதிர்த்து போராடினோமோ, அதை முழுமையாக தமிழிசையிடம் ரங்கசாமி விட்டுவிட்டு சரணாகதி அடைந்துள்ளார். மத்தியில் உள்ள பாஜக அரசு உடனடியாக புதுச்சேரிக்கு நிரந்தர ஆளுநரை நியமிக்க வேண்டும். தமிழிசையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
