'நீட்' விலக்குகோரி பொதுக்கூட்டம் - டி.டி.வி. தினகரன் அறிவிப்பு
நீட்டுக்கு எதிராக திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் இந்த பொதுக்கூட்டத்துக்கு அனைவரும் கலந்துகொள்ளவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு, அனிதா மரணத்துக்கு நீதி கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
பள்ளி - கல்லூரி மாணவர்கள், அமைப்புகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினர் நீட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்காத வகையில் போராட்டம் நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. மேலும், பொதுக்கூட்டம் நடத்த உச்சநீதிமன்றம் எந்தவொரு தடையும் விதிக்கவில்லை.
இந்த நிலையில், நீட் விலக்கு கோரி வரும் 16 ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
நீட்டுக்கு எதிராக நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கு, தொண்டர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என திளராக கலந்து கொள்ள வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க அவசர சட்டம் இயற்ற வலியுறுத்தி இந்த பொதுக்கூட்டம் நடைபெறும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அண்மையில், நீட்டுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் திருச்சி, உழவர்சந்தை மைதானத்தில் நடைபெற்றது. இதில் திமுக உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் பலர் பங்கேற்றனர். அதேபோல் நீட்டுக்கு ஆதரவு தெரிவிக்கு வகையில் பாரதிய ஜனதா கட்சியினர் திருச்சியில் நேற்று பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.
திமுக, பாஜக பொதுக்கூட்டம் நடத்திய அதே இடத்தில் டிடிவி தினகரன் பொதுக்கூட்டம் நடத்த உள்ளார்.