ஓ.பி.எஸ்ஸின் அரசியல் எதிரி தங்க தமிழ்செல்வனை கைது செய் - ஆண்டிபட்டி மக்கள் போராட்டம்
முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் நம்பர் ஒன் அரசியல் எதிரி சசிகலாவா? என கேட்டால் இல்லை என்று தான் பதில் வரும். காரணம், அந்த இடத்தை பிடிப்பவர் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ தங்கதமிழ்செல்வன் ஆவார்.
அந்த அளவிற்கு அரசியல் எதிரியை தாண்டி பரம வைரியாக பார்க்கப்படுபவர். ஓ.பி.எஸ்ஸின் அரசியல் எதிரியாக இருக்கும் தங்க தமிழ்செல்வனை கைது செய்ய கோரி 500 க்கும் மேற்பட்டோர் ஆண்டிபட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியே பெரும் பதற்றத்துக்கு ஆளானது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது தங்கதமிழ்செல்வனின் சொந்த ஊரான நாராயண தேவன்பட்டி. அந்த கிராமத்தை சேர்ந்த மறவர் சமுதாயத்தினர் 500 க்கும் மேற்பட்டோர் ஆண், பெண் என ஒன்றாக திரண்டு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய பெரியவர் ஒருவர், தங்க தமிழ்செல்வனின் முந்திரி தோட்டத்திற்குள் நுழைந்து முந்திரி காய்கள் பறித்ததாக கூறி சம்பந்தம் இல்லாத நபர்களை தாக்குவதாகவும், அவர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு துன்புறுத்துவதாகவும், தங்க தமிழ்ச்செல்வன் மீது புகார் கூறினார்.
டி.டி.வி தினகரனின் நெருங்கிய சகாவான தங்க தமிழ்ச்செல்வன் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தங்களை துன்புறுத்துவதால் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவரது சொந்த கிராமத்தினரே புகார் அளித்தனர்.
பின்னர், புகார் ஏற்றுக்கொள்ளப் படாததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சசிகலாவுக்கு எதிராக ஆங்காங்கே போராட்டங்களும் ஆர்பாட்டங்களும் நடைபெற்று வரும் நிலையில், தேனி மாவட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு எதிராக கிளம்பியுள்ள எதிர்ப்பு அம்மாவட்ட அதிமுகவினருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.