"இலங்கைக்கு போகக்கூடாது!!" - இளையராஜா வீடு திடீர் முற்றுகை
இலங்கையில் நடக்கு இசை கச்சேரி நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், அவரது வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வரும் ஜூலை மாதம் இலங்கையில் இசை கச்சேரி நடைபெற இருக்கிறது. இதில், கலந்து கொள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையொட்டி அவர், இலங்கை செல்வதாக பேசப்பட்டது.
இந்நிலையில், இலங்கைக்கு செல்லும் இளையராஜாவை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், இன்று அவரது வீட்டின் முன் திரண்டனர். அங்கு இலங்கைக்கு இளையராஜா செல்வதை கண்டித்து கோஷமிட்டனர்.
தகவலறிந்து போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் கூறியதாவது:-
ரத்தக்கரை படிந்த சிங்கள இனவெறியர்களோடு இளையராஜா கைக்கோர்த்து நிற்கக்கூடாது என்பதே எங்களின் வேண்டுகோள். அவர், ஜூலை மாதம் செல்ல இருக்கும் பயணத்தை கைவிட்டு உலகமெங்கும் வாழும் தமிழர்கள் ஒருங்கிணைந்து முன்னெடுத்துக் கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.