பல்வேறு சங்கங்கள் போராட்டம் செய்ய உள்ளனர் என்ற தகவல் அறிந்த போலீசார் முன்னெச்சரிக்கையாக சென்னை பல்கலைகழகம் முழுவதையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

சென்னை பல்கலைக்கழக மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக தொல்லியல் துறை பேராசிரியர் சௌந்தர்ராஜனை பணி நீக்கம் செய்ய வேண்டும் என 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்ததனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னை பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறை பொறுப்பு தலைவராக உள்ளவர் சௌந்தர்ராஜன். அவர் அந்த துறையில் தன்னிடம் மதிப்பெண் கேட்க வந்த மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்றும், அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அதே போன்று போராட்டத்தில் ஈடுபட்டதால் இடைநீக்கம் செய்த மாணவர்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி தொல்லியல் துறை மாணவர்கள் கடந்த 5 நாட்களாக கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். 

இந்த நிலையில் இன்று 6வாது நாள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்களை போலீசார் கைது செய்து, சென்னை சேப்பாக்கம் பகுதியில் உள்ள குடோனில் வைத்துள்ளனர். மேலும் கைது குறித்து தற்போது வரை எந்த காரணமும் போலீசார் தரப்பில் வழங்கப்படாமல் உள்ளது. மேலும் ஆசிரியரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று பல்வேறு சங்கங்கள் போராட்டம் செய்ய உள்ளனர் என்ற தகவல் அறிந்த போலீசார் முன்னெச்சரிக்கையாக சென்னை பல்கலைகழகம் முழுவதையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். 

மாணவர்கள் தங்களுடைய அடையாள அட்டையை காண்பித்த பிறகே கல்லூரி வளாகத்திற்குள் செல்ல அனுமதி வழங்குகின்றனர்.கல்லூரி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிரியரை விசாரிக்க குழு அமைக்கப்பட்டு முதல் கட்ட விசாரணை நடைபெற்று வருவதாகவும், உடனடியாக பேராசிரியரை பணி நீக்கம் செய்ய முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.