கணவர் காலத்தை காலியாகவிட்ட சசிகலா..! இப்போ மட்டும் எப்படி வந்தார் கணவர்? பரோல் கிடைப்பதில் சிக்கல்?
சசிகலாவின் கணவர் நடராஜன், சென்னை தனியார் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, கணவரைப் பார்ப்பதற்காக 15 நாட்கள் பரோல் கேட்டு சிறை நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளார்.
சசிகலாவிற்கு பரோல் அளிப்பது தொடர்பாக சென்னை காவல்துறை ஆணையரின் ஒப்புதலைக் கேட்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையரின் ஒப்புதல் கிடைத்தால், சிறப்பு நீதிமன்றத்தில் உத்தரவு பெற வேண்டும்.
இந்நிலையில், சசிகலாவின் பரோல் மனுவை பரிசீலிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்துள்ளார்.
அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அதற்கான பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்டார். அதுதொடர்பான கெஜட்டில் கணவர் என்ற காலத்தில் யார் பெயரையும் குறிப்பிடாமல் காலியாக விட்டுள்ளார். ஆகையால் நடராஜன் யார் என்ற கேள்வி எழுகிறது. எனவே சசிகலாவின் பரோல் மனுவை பரிசீலிக்கக்கூடாது.
இவ்வாறு அந்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
சசிகலா பரோலில் வெளியே வந்தால், முதல்வர் பழனிசாமி அணியில் ஸ்லீப்பர் செல்களாக இருக்கும் அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் சசிகலாவை சந்திக்கக்கூடும். இதனால் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் பதவிக்கும் ஆட்சிக்கும் பங்கம் வந்துவிடும் எனவும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு எதிரான நடவடிக்கைகள் வலுக்கக்கூடும் என பழனிசாமி தரப்பினர் நினைக்கின்றனர். எனவே பழனிசாமி தரப்பின் ஆலோசனையின் பேரில் வழக்கறிஞர் இந்த மனுவை அளித்துள்ளார் என கூறப்படுகிறது.
சசிகலாவின் பரோலுக்கு எதிராக மனு அளிக்கப்பட்டதன் பின்னணி எதுவாக இருந்தாலும் அந்த மனுவின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து அது கருத்தில் கொள்ளப்பட்டால், சசிகலாவுக்கு பரோல் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம்.