ஜேப்பியார் கல்லூரியை அடுத்து தம்பிதுரையின் கல்லூரிக்கும் சிக்கல்... நீதிமன்றம் போட்ட உத்தரவு..!
நாடாளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் (அதிமுக) தம்பிதுரை. இவரின் பல்கலைக்கழகம் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து உள்ளதா? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் (அதிமுக) தம்பிதுரை. இவரின் பல்கலைக்கழகம் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து உள்ளதா? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த கோனம்பேடு கிராம பொது நல சங்கத்தின் தலைவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், தங்கள் கிராம பகுதியில் தற்போது நில ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதாகவும் இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தங்களது கிராமத்தில் பாதாள சாக்கடை வசதியோ, எந்த ஒரு அரசு கட்டடங்களோ இல்லை என்றும் தெரிவித்துள்ளார். குறிப்பாக முன்னாள் கல்வித்துறை அமைச்சர் தம்பிதுரையின் கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் கிராம நிலங்கள், நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் கல்வித்துறை அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரையின் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி பல்கலைக்கழகம் அருகில் கிராம நிலங்கள் மற்றும் நீர்நிலங்களை ஆக்கிரமித்து மின்சார துணைமின் நிலையம், தனியார் பாதை, மாணவர், மாணவியர் தங்கும் விடுதி ஆகியவை கட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அதேசமயம் அருகில் உள்ள ஆவடி நகராட்சி உயர்நிலை பள்ளியில் எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த நிலத்தை மீட்டு சம்பந்தப்பட்ட அரசு பள்ளிக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கல்யாண சுந்தரம், நீதிபதி வி.சிவஞானம் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்கலைக்கழகம் சார்பில் இந்த வழக்கு குறித்து தங்களுக்கு எந்த நோட்டீசும் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ’’நாடாளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரையின் பல்கலைக்கழகம், அரசு நிலங்களை ஆக்கிரமித்துள்ளதா? வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு உரிய நோட்டீஸ் அளிக்கப்பட வேண்டும். அனைத்து நிலங்களையும் சர்வே மேற்கொண்டு 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.