கருணாநிதி குடும்பத்திற்கு வாழ்த்து சொல்லும் சசி குடும்பம்...!
2ஜி வழக்கில் இருந்து விடுதலையான கனிமொழிக்கு இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல் டிடிவி தினகரனும் கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தவர் திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா. தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டதில் அரசுக்கு ஒரு லட்சத்து ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்தன.
இவ்வழக்கு தொடர்பாக, ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் தலைவர் ஷாகித் உஸ்மான் பல்வா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். அதன்பின் அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர்.
இந்த வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேரையும் நீதிபதி விடுவித்தார். குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்களை சிபிஐ நிரூபிக்க தவறியதால், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதாக சிபிஐ நீதிமன்றம் கூறியுள்ளது.
இதனிடையே ஏற்கனவே திமுகவுக்கும் தினகரனுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அதிமுகவின் ஓட்டுக்களை பிரிக்கவே திமுகவுடன் சேர்ந்து டிடிவி கூட்டுச்சதி செய்கிறார் என்வும் ஆளுங்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், 2ஜி வழக்கில் இருந்து விடுதலையான கனிமொழிக்கு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியாவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணப்பிரியா வெளியிட்டுள்ள ட்விட்டரில் ஒரு தாயாக ஒரு பெண்ணாக திருமதி கனிமொழிக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.