PM Modi : மே 26-ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கடந்த ஜனவரி 12ஆம் தேதி பிரதமர் மோடி மதுரையில் பொங்கல் விழாவில் பங்கேற்க இருந்தாக கூறப்பட்டது. தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க வருகை தருவதாகவும் இருந்தது. கொரோனா பரவல் காரணமாக மோடியின் தமிழகம், புதுச்சேரி பயணமும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வரும் 26ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் விழாவில் பங்கேற்க தமிழகம் வருகிறார். தெற்கு ரயில்வேயின் புதிய திட்டங்களையும் பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைக்கவுள்ளதாக தெரிகிறது. அத்துடன் ரூ. 12,413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை வரும் பிரதமர் மோடியை முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசுகிறார். இலங்கை தமிழர் விவகாரம், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வர் முன் வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுகவுக்கும், பாஜகவுக்கும் அடிக்கடி உரசல்கள் ஏற்பட்டாலும், பாஜக தலைமையிடம் திமுக அனுசரணையாக செல்கிறது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கும் இந்நேரத்தில் பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : Tamilnadu Rain :இன்று தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை..தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.!

இதையும் படிங்க : TNPSC : டிஎன்பிஎஸ்சி தேர்வில் மைனஸ் மார்க் இருக்கு.. மாணவர்கள் ஷாக்.! வெளியான அதிர்ச்சி தகவல் !