ஜனாதிபதி தேர்தலில் கிறிஸ்தவரை அறிவிக்கலையே.. ஆதரவு கொடுக்கமாட்டேன்னு சொல்வீங்களா திருமா.? பங்கம் செய்த பாஜக!
ஒரு கிறிஸ்தவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினீர்களா?ஆம் எனில் உங்களின் கோரிக்கையை ஏற்காததால் ஆதரவு கொடுக்க இயலாது என்று அறிவிப்பீர்களா? என்று விசிக தலைவர் திருமாவளவனுக்கு தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
குடியரசுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக கிறிஸ்தவர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கடந்த 15-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “இதுவரை கிறித்தவ சமூகத்தைச் சேர்ந்த எவரும் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தில்லை என்பது கவனிக்கத் தக்கதாகும். இந்திய சுதந்திரத்தின் பவள விழா கொண்டாடப்பட இருக்கும் இநநேரத்தில் கிறித்தவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவது இந்திய ஜனநாயகத்தின் மாண்பை உலகுக்கு உணர்த்துவதாக அமையும். பெரும்பான்மைவாத அடிப்படையில் இந்துக்களை ஒருங்கிணைக்க சிறுபான்மையினருக்கெதிரான வெறுப்பு அரசியலையே தமது பிழைப்புக்கான கருவியாகப் பயன்படுத்தும் பாஜக, குடியரசுத் தலைவர் தேர்தலையும் அதே நோக்கத்தில்தான் பயன்படுத்தும்.எனவே, எதிர்க்கட்சிகள் தமது பொது வேட்பாளராகக் கிறித்துவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்த வேண்டும்” என்று திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
இதற்கு அன்றைய தினமே திருமாவளவனுக்கு தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்திருந்தார். “2012ல் வட கிழக்கு மாநிலத்தை சேர்ந்த கிறிஸ்தவர் பி.ஏ.சங்மா ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டபோது மக்களவை உறுப்பினராக இருந்த திருமாவளவன் சங்மாவுக்கு வாக்களிக்கவில்லையே ஏன்? ஆதரவு தர மறுத்தது ஏன்? அப்போது ஒரு கிறிஸ்தவர் ஜனாதிபதியாக வேண்டும் என்று உருகவில்லையே, ஏன்? இப்போது கிறிஸ்தவர்கள் மீது வந்துள்ள பாசம் அப்போது இல்லாமல் போனது ஏன்? அரசியலில் மதத்தை கலக்கும் திருமாவளவனின் அறிக்கை கிறித்தவ மதத்தின் மீதான அவரின் போலி பாசத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அரசியலில் மதத்தை கலக்கும் அநாகரீக அரசியலை திருமாவளவன் கைவிட வேண்டும்.” ” என்று நாராயணன் திருப்பதி காட்டமாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. யஷ்வந்த் சின்ஹா முன்னாள் பாஜகக்காரர் ஆவார். வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் நிதித் துறை, வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் யஷ்வந்த் சின்ஹா ஆவார். குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விசிகவை விமர்சிக்கும் வகையில் தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயனன் திருப்பதி தன்னுடைய சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
அதில், “ஒரு கிறிஸ்தவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினீர்களா?ஆம் எனில் உங்களின் கோரிக்கையை ஏற்காததால் ஆதரவு கொடுக்க இயலாது என்று அறிவிப்பீர்களா? இல்லை எனில் ஒரு கிறிஸ்தவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று சொல்லி மதவாத அரசியல் செய்ததற்கு மன்னிப்பு கேட்பீர்களா?” என்று திருமாவளவனுக்கு நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பி விமர்சனம் செய்துள்ளார்.