ரேஷன் கடைகளில் தரமில்லாத அரிசியா.? வாங்காதீர்கள், பொதுமக்களுக்கு திமுக எல்எல்ஏ அட்வைஸ்...
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு போன் செய்து மக்களுக்கு நல்ல தூய்மையான சுத்தமான அரிசியை வழங்குங்கள், தமிழக முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளாதீர்கள் என எச்சரித்ததுடன்,
ரேஷன் கடைகளில் தரமில்லாத அரிசி வழங்கினால் மக்கள் அதை வாங்க வேண்டாம் எனவும், அப்படி தரமில்லை என்றால் தொலைபேசியில் அழைத்து புகார் தெரிவிக்கலாம் என திமுக எம்எல்ஏ கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 159 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றி திமுக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக அரியணை ஏறியுள்ளார். ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்தே முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிவித்தவண்ணம் உள்ளார். தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜன் ஏற்பாடு என அரசு இயந்திரம் 24 மணி நேரமும் சுற்றி சுழன்று வருகிறது. தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மாவட்டம் தோறும் கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
கொரோனா தொற்றால் உயிரிழந்த முன்கள பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது, ஏற்கனவே அறிவித்தபடி மீதமுள்ள நிவாரணநிதி 2 ஆயிரமும் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதேபோல் அதிகாரிகள் உண்மையுடனும், நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த அதிரடி நடவடிக்கைகளை திமுகவினர் மட்டுமின்றி அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் தெற்கு சட்டமன்ற தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், சட்டமன்ற தொகுதியில் உள்ள மாஸ்கோ நகர் பகுதியில் நியாய விலை கடையில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பொது மக்களிடம் அரிசி தரமாக உள்ளதா என்று கேள்வி எழுப்பிய அவர், ரேஷன் கடையில் உள்ள அரிசி மூட்டைகளை ஆய்வு செய்தார். அப்போது அங்கு உள்ள அரிசிகள் தரம் இல்லை என்பதை உணர்ந்த அவர், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு போன் செய்து மக்களுக்கு நல்ல தூய்மையான சுத்தமான அரிசியை வழங்குங்கள், தமிழக முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளாதீர்கள் என எச்சரித்ததுடன், அரிசி தரமில்லை என்றால் தன்னிடம் தெரிவியுங்கள், தரமில்லாத அரிசியை பெற வேண்டாம் என்று பொதுமக்களிடம் கூறியுள்ளார். அவரின் இந்தப் பேச்சு அங்கிருந்த மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுடன், சட்டமன்ற உறுப்பினரின் நடவடிக்கையால் அப்பகுதி மக்கள் நம்பிக்கையும், மிகுந்த நெகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.