அண்ணாமலை நடைபயணத்தில் விடியல...முடியல எனும் வாசகத்துடன் கூடிய  மக்கள் புகார் பெட்டி இடம் பெறும் எனவும், அதில் ஊழல் , சட்டம் ஒழுங்கு ,  கள்ளச்சாராயம் , கட்டப் பஞ்சாயத்து , வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது உள்ளிட்ட புகார்களை பொதுமக்கள் வழங்கலாம் என பாஜக மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர். 

அண்ணாமலை நடை பயணம்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

' என் மண் , என் மக்கள் ' என்ற தலைப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகிற 28 ஆம் தேதி முதல் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார், 28ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா மூலம் ராமேஸ்வரத்தில் தொடங்கி வைக்கப்பட உள்ள நிலையில் நடைபயணத்தில் இடம்பெற உள்ள புகார் பெட்டியின் அறிமுக விழா சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. கட்சியின் மூத்த நிர்வாகிகளான பொன்.ராதாகிருஷ்ணன் , எச்.ராஜா , நயினார் நாகேந்திரன் , வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அப்போது விடியல...முடியல எனும் வாசகத்துடன் கூடிய ' மக்கள் புகார் பெட்டி ' யை அறிமுகம் செய்தனர். அண்ணாமலையின் நடை பயணத்தின்போது இந்த புகார் பெட்டியும் இடம்பெற்றிருக்கும் எனவும் ,ஊழல் , சட்டம் ஒழுங்கு , கள்ளச்சாராயம் , கட்டப் பஞ்சாயத்து , வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது உள்ளிட்ட புகார்களை பொதுமக்கள் அப்பெட்டியினுள் வழங்கினால் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை நடைபயணம்- அமித்ஷா தொடங்கிவைக்கிறார்

அப்போது செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், ' என் மண் என் மக்கள் ' நடைபயணம் வரும் 28ம் தேதி முதல் தொடங்குகிறது. ஊழலற்ற அரசாங்கம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் , பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால சாதனையை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து , பாஜக கூட்டணியின் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் இந்த நடைபயணம் திட்டமிடப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் ராமேஸ்வரத்தில் தொடங்கி வைக்கிறார். அன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராமேஸ்வரத் தீர்மானங்கள் வெளியிடப்படும். தமிழக பாஜக எந்த திசை , இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் , எப்படியான வெற்றியை பெற வேண்டும் என்ற சிந்தனையுடன் அந்த தீர்மானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 


தமிழகத்தில் 11 பொதுக்கூட்டங்கள்

நடைபயணம் 39 நாடாளுமன்ற தொகுதி , 234 சட்டமன்ற தொகுதியையும் கடந்து செல்லும். ஒவ்வொரு நாளும் பாதயாத்திரை மூலமாகவும் , வாகனம் மூலமாகவும் அண்ணாமலை மக்களை சந்திப்பார். நடைபயணத்தின் இடையே தமிழுக்கும் தமிழகத்துக்கும் பிரதமர் என்ன செய்தார் என்பது குறித்த 10 லட்சம் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. 1 கோடி குடும்பங்களுக்கு அண்ணாமலையின் கடிதம் அனுப்பப்பட உள்ளன. தமிழ்தாயின் சிலை வைக்க தமிழகம் முழுவதும் நடைபயணம் செல்லும் ஊர்களில் புனித மண் சேகரிக்கப்படும். அண்ணாமலை மேற்கொள்ளும் நடைபயணத்தின் இடையே மத்திய அமைச்சர்கள் , பாஜகவின் தேசிய தலைவர்கள் 11 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேச உள்ளனர்.

புதிய அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தும்

அண்ணாமலையில் நடைபயணம் நிறைவடையும்போது தமிழகத்தில் மாபெரும் அரசியல் திருப்புமுனை ஏற்படும் , 2024 நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் வெற்றியை கைப்பற்றும் வகையில் திருப்புமுனை ஏற்படும். புதிய அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தும் இந்த யாத்திரைக்கு ஒட்டுமொத்த தமிழகமும் ஆதரவு தர வேண்டும். இது கட்சிக்கானது அல்ல, 8 கோடி தமிழர்களுக்கானது . எங்கள் நடைபயணத்தால் எங்களுக்கு ஆதரவு பெருகத்தான் செய்யும் ,

பாஜக பலம் பெற வேண்டும் என்பதே எங்கள் கருத்து. பாஜக பலம் பொருந்துவதை வரவேற்கதான் செய்வோம். ராமநாதபுரம் மட்டும் அல்ல , 543 தொகுதியிலும் மோடி போட்டியிட வேண்டும் என மக்கள் விரும்பலாம் , ஆனால் அவர் போட்டியிடும் இடத்தை பாஜக தலைமைதான் முடிவு செய்யும். ராகுல் காந்தியின் நடை பயணத்தை விட பல மடங்கு பலம் பொருந்தியாதாக அண்ணாமலையின் நடைபயணம் அமையும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல... கோவையில் போஸ்டர் ஒட்டி பாஜகவை அலறவிடும் திமுக