முருகனை விடுத்து விநாயகரை வைத்து அரசியல்... இந்து முன்னணியை பின்பற்றும் பாஜக..!
விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு அனுமதி தராதது புரியாத புதிராக உள்ளது.
பிள்ளையார் சதுர்த்தி விவகாரத்தில் இந்து முன்னணி நிலைப்பாட்டை பாஜக பின்பற்றும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி விழா 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. வழக்கமாக இந்து அமைப்புகள் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பார்கள். ஆனால், இந்த ஆண்டு கொரோனா தாக்கம் இருப்பதால் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. ஆனால், தடையை மீறி விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என்று இந்து அமைப்புகளும் பாஜகவும் பேசிவருகிறது.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூறுகையில், ‘’தடையை மீறி விநாயகர் சிலைகளை நிறுவுவோம் என இந்து முன்னணி ஏற்கனவே அறிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் இந்து முன்னணியின் நிலைப்பாடுதான் பாஜகவின் நிலைப்பாடும். இந்து முன்னணி நிலைப்பாட்டை பாஜக பின்பற்றும். விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு அனுமதி தராதது புரியாத புதிராக உள்ளது. டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி தந்த தமிழக அரசு விநாயகர் சிலையை வைக்க அனுமதி மறுப்பது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.