பக்குவப்படுங்க பிரகாஷ்ராஜ்: ஆளுமையாளர்களின் அழுத்த அட்வைஸ்!
பிரகாஷ் ராஜ் மிக சிறந்த நடிகரா? என்று கேட்டால் அது அந்தளவுக்கு உண்மை இல்லை! என்று அவரை மிக நெருக்கமாக உணர்ந்த சினிமா ஆளுமைகள் சிலர் சொல்வார்கள்.
அதற்கு அவர்கள் சொல்லும் காரணம்!...’ஒரு நடிகனின் இயல்பான கேரக்டர் அவன் செய்யும் கதாபாத்திரங்களில் பிரதிபலிக்குமானால் அவன் சிறந்த நடிகனில்லை.’ என்பதே.
அந்த வகையிலேயே பிரகாஷ் ராஜை சிறந்த நடிகனாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று வியாக்யானம் கொடுக்கிறார்கள். தேசிய விருதுகள் பெற்ற நடிகரை பார்த்து இப்படியொரு விமர்சனமா? என்றெல்லாம் கேட்டுவிட முடியாது. விருதுகள் பல நேரங்களில் மிக துல்லியமான அளவுகோலில்லை என்பதும் அவர்களது வாதம்.
சரி, அப்படியென்ன பிரகாஷ் ராஜின் இயல்பான குணம்! என்று கேட்டால்...பிரகாஷ்ராஜ் சினிமாவில் ஏற்று நடிக்கும் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் எல்லாவற்றையும் தாண்டி ஒருமேதாவித்தனம், ஒரு ரிச்னஸ், ஒரு அகம்பாவம் தெரியும். அவர் பிச்சைக்காரனாக நடித்தாலும் கூட ஒரு ரிச்னஸ் இருக்கும். இதுதான் அவரது உண்மையான குணம்.
யாரையும் மதித்துப் பேசாத குணம், எல்லோரையும் ஏவி ஏவியே டீல் செய்வது, மீடியாவிடம் எரிந்து விழுவது, பொதுவெளியில் ரசிகர்களிடமிருந்து தன்னை தள்ளி வைப்பது, செல்ஃபி எடுக்க கூட அனுமதிக்காதது, அடர்த்தியான இலக்கியம் தெரிந்த நடிகர் எனும் நினைப்பு என பிரகாஷ்ராஜிடம் நிறைய கடினங்கள் உண்டு. இவை எல்லாமேதான் அவரது கதாபாத்திரங்கள் அத்தனையிலும் பிரதிபலிக்கும்.
தற்போது மத்தியரசை விமர்சித்து அவர் வைக்கும் கருத்துக்களிலும், ‘நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குவது நாட்டுக்கு நல்லதல்ல. ரஜினிகாந்த், கமல்ஹாசன், உபேந்திரா, பவன்கல்யாண் என யாராக இருந்தாலும் நடிகர்கள் அரசியலுக்கு வருவதை நான் ஆதரிக்கமாட்டேன்.’ என்று கூறியிருப்பதும் கூட அவரது கடினத்தன்மையான குணத்தின் வெளிப்பாடே!
அரசியலுக்கு வர எத்தனிக்கும் நடிகர்களை ஆதரிக்கமாட்டேன் என்று பிரகாஷ்ராஜ் சொல்வது அவரது தனிப்பட்ட உரிமை. ஆனால் கலைஞன் எனும் வகையில் ரசிகர்கள், சினிமா விரும்பிகள், கலாரசிகர்கள் ஆகியோருக்கு முன்னிலையில் பிரகாஷ்ராஜ் பாந்தமாக நடக்க கற்றுக் கொள்ள வேண்டும். பக்குவமில்லாமல் பேசுவது அவரது மூர்க்கபுத்தியை மட்டுமே பிரதிபலிக்கிறது.” என்று அழுத்தமாக சொல்லி வருகின்றனர்.
இதுக்கு என்ன சொல்லப்போறீங்க முத்துப்பாண்டி? செல்லம் ஐ வ்யூன்னா! இல்ல ஹேட் யூன்னா?