போலீஸ் உதவியுடன், போலீஸ் வாகனத்திலேயே கற்கள், பெட்ரோல் குண்டுடன் வந்தார் ஓபிஎஸ்... பன்னீர் மீது பகீர் புகார்.
ஓ பன்னீர் செல்வத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை ரத்து செய்ய வேண்டுமென அதிமுக மாவட்ட செயலாளர் டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
ஓ பன்னீர் செல்வத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை ரத்து செய்ய வேண்டுமென அதிமுக மாவட்ட செயலாளர் டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். கடந்த 11ஆம் தேதி போலீஸ் உதவியுடன், போலீஸ் வாகனத்திலேயே கற்கள் பெட்ரோல் குண்டுகள் கொண்டு வந்து ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். காவல்துறையை ஓபிஎஸ் தவறாக பயன்படுத்தி உள்ளதால் அவரது பாதுகாப்பை ரத்து செய்யவேண்டும் என்றும் அவர் அந்ந புகாரில் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்: சும்மா கெத்தா.. அதிமுக பொதுச்செயலாளராக சேலம் செல்லும் எடப்பாடி.. வழி நெடுகிலும் மாஸ் வரவேற்பு
கடந்த 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார், அதே நேரத்தில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகம் சென்று ஆவணங்களை அள்ளிச் சென்றார். இதைத்தொடர்ந்து இருவரும் ஏட்டிக்கு போட்டியாக மாற்றி மாற்றி கட்சியில் இருந்து நிர்வாகிகளை நீக்கி வருகின்றனர். மொத்தத்தில் அதிமுகவில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரும் அதிமுக தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் பன்னீர்செல்வத்துக்கு எதிராக டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதையும் படியுங்கள்: மருத்துவமனையில் இருந்துக்கொண்டே பணி செய்யும் முதல்வர்.. நீலகிரி மழை நிலவரத்தை விசாரித்து குழு அமைப்பு
அதில், ஓ.பன்னீர்செல்வம் ஊருக்கு வழங்கியுள்ள போலீஸ் பாதுகாப்பை ரத்து செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த புகாருக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:- ஓ பன்னீர்செல்வம் முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் அவருக்கு வழங்கியுள்ள போலீஸ் பாதுகாப்பை அவர் தவறாக பயன்படுத்தியுள்ளார், பொதுக்குழு நடந்த அன்று அதிமுக அலுவலகம் நோக்கி வந்த ஓ.பன்னீர்செல்வம் போலீஸ் உதவியுடன், போலீஸ் வாகனத்தில் கற்கள் பெட்ரோல் குண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை எடுத்து வந்து, தனி பாதுகாப்பு போலீசாரின் உதவியுடனேயே அதிமுக அலுவலகத்தில் ஆவணங்களை கொள்ளையடித்து சென்றார்.
மேலும் அங்கிருந்த எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மீது அவரது ஆதரவாளர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். எனவே தனக்கு வழங்கியுள்ளார் போலீஸ் பாதுகாப்பை அவர் முற்றிலும் தவறாக பயன்படுத்தியுள்ளார், இந்நிலையில் தமிழக காவல்துறை உரிய சட்ட விதிமுறைகளின் படி நடவடிக்கை எடுத்து ஓபிஎஸ்-க்கு வழங்கியுள்ள தனி போலீஸ் பாதுகாப்பை ரத்து செய்ய வேண்டும், ஒருவேளை அப்படி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இதுதொடர்பாக நீதிமன்றத்தை நாடி சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என ஆதிராஜாராம் கூறினார்.
மேலும் 11ஆம் தேதி நடந்த கலவரம் குறித்து ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு காவல் நிலையங்களில் அதிமுக சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, மாறாக புகார் அளித்த இரண்டு பகுதி செயலாளர் உட்பட 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என அவர் கூறினார்.