ராமதாஸின் கனவுக்கு கண்ணிவெடி வெச்சுட்டார் எடப்பாடி... பதறும் பா.ம.க. கேம்பஸ்!!!
வட மாவட்டங்களில் இருக்கும் வன்னியர் வாக்கு வங்கியில் கணிசமானவற்றை அ.தி.மு.க.வும் பிரிக்கும் சூழல் உருவாகிவிட்டது. இதனால் தினகரன், ராமதாஸிடம் கைகோர்ப்பார் என்கிற கனவும் தகர்ந்துவிட்டது பா.ம.க.வுக்கு.
உமது அரசியல் அப்ரோச்மெண்ட்ஸ் எல்லாமே ஒரு மார்க்கமாகவே இருக்கின்றன’ என்று ஆச்சரியப்படுதலுக்கு முழு சொந்தக்காரர் டாக்டர் ராமதாஸ். ஜெ., கருணாநிதி மறைவுக்குப் பின் மளமளவென முன்னேற முயன்றவரை எடப்பாடியார் ஒரு சின்ன கண்ணிவெடியின் மூலம் பின்னோக்கி தள்ளிவிட்டார் என்கிறார்கள்.
எப்படி? படையாச்சி! சமூகம்தான் ராமதாஸின் பலமே. ஆனால் இன்று அதையே பலவீனமாக்கும் வேலையை கச்சிதமாக எடப்பாடியார் முடித்திருப்பதுதான் இந்த பிரச்னைக்கான விதையே. அதாவது, ராமதாஸால் விமர்சிக்கப்பட்ட ராமசாமி எடப்பாடியார் உயர்த்திப் பிடித்திருப்பதுதான் டாக்டருக்கு எதிராக வளரும் விருட்சமே. இது குறித்து விரிவாக பேசும் அரசியல் விமர்சகர்கள்...”தனக்கும், ஜெயலலிதாவுக்கும் பிறகு அரசியலில் நின்று விளையாடப்போவது ஸ்டாலின் தான் என்று கருணாநிதி நினைத்து தன் மகனை கூர் தீட்டி வைத்தார்.
அதை மிக சரியாக புரிந்து கொண்டு தன் மகனை களமிறக்கி சவால் கொடுக்க முயன்றார் ராமதாஸ். ஆனால் அது பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. ஆனாலும் கூட அந்த முயற்சி இன்னும் தொடர்கிறது. இப்போது மிக நெருக்கடியான கால கட்டத்தில் இருக்கிறது பா.ம.க. சட்டமன்றம், நாடாளுமன்றம், ராஜ்யசபா என எங்குமே அக்கட்சிக்கு ஒரு உறுப்பினர் கூட இல்லை. இது அக்கட்சியை முடக்கிட துடிக்கிறது.
அபாயத்தை உணர்ந்திருக்கும் ராமதாஸ், வேறு வழியில்லாமல் தி.மு.க கூட்டணிக்கு முயற்சிக்கிறார். ஒருவேளை இது பலிக்காவிட்டால் தினகரனோடு கைகோர்த்திடும் திட்டத்தில் இருக்கிறார். தினகரனை சம்மதிக்க வைக்க ராமதாஸ் வைத்திருந்த திட்டம், வட மாவட்டங்களில் இருக்கும் படையாச்சியார் இன வாக்கு வங்கிதான். வடமாவட்டத்தில் தினகரனுக்கு சமுதாய ரீதியில் செல்வாக்கு இல்லாததால் இதைக் காட்டி அவரை வளைக்கலாம் என்று ராமதாஸ் நினைத்திருந்தார்.
ஆனால் டாக்டரின் இந்த திட்டத்துக்கு செமத்தியாக செக் வைத்துவிட்டார் எடப்பாடியார். வன்னியர் இன மக்களின் முக்கிய நட்சத்திரமான ராமசாமி படையாச்சியாருக்கு நினைவிடம் அதுயிதுவென எடப்பாடியார் இப்போது அறிவித்தார். இதற்காக அவருக்கு பாராட்டு விழாவும் நடத்தப்பட்டு விட்டது. இதன் மூலம் வட மாவட்டங்களில் இருக்கும் வன்னியர் வாக்கு வங்கியில் கணிசமானவற்றை அ.தி.மு.க.வும் பிரிக்கும் சூழல் உருவாகிவிட்டது.
இதனால் தினகரன், ராமதாஸிடம் கைகோர்ப்பார் என்கிற கனவும் தகர்ந்துவிட்டது பா.ம.க.வுக்கு. இது டாக்டருக்கு, ஆரோக்கியமற்ற நேரம்தான்.” என்கிறார்கள். ஹும்! பலே எடப்பாடியார்தான்!