எங்க ஓட்டு மட்டும் இனிக்குது... எங்களுக்கான உரிமையை கேட்டா கசக்குதா? போராட்டத்தில் குதித்த வன்னியர்கள்..!
வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை நோக்கி வரும் பாமகவினரை பெருங்களத்தூரில் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனை கண்டித்து பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை நோக்கி வரும் பாமகவினரை பெருங்களத்தூரில் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனை கண்டித்து பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தபடி, வன்னியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு தமிழ்நாடு தேர்வாணையம் அலுவலகம் எதிரில் இன்று டிசம்பர் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாமக அறிவித்திருந்தது. வெளியில் ஆர்ப்பாட்டம் என்று சொன்னாலும், அதிகமான கூட்டத்தைக் கூட்டி தமிழ்நாடு தேர்வாணையம் அலுவலகத்தை முற்றுகையிடுவது என பாமக தலைமை முடிவு செய்துள்ளது. முதல் நாள் போராட்டத்தில் இளைஞர் அணி தலைவர் அன்புமணி, பாமக தலைவர் ஜி.கே.மணி கலந்துகொள்கிறார்கள்.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 50 நிர்வாகிகள் இருக்கிறார்கள் இவர்கள் அனைவரும் தலா ஒரு கார் எடுத்து வரவேண்டும். அவர்கள் குறைந்தது ஐந்து பேரை அழைத்து வரவேண்டும். இது தவிர ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றிய மாவட்ட கவுன்சிலர்கள், ஆட்களை அழைத்து வரவேண்டும் என பாமக தலைமை உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த போராட்டத்தில் பங்கேற்றும் நோக்கத்தோடு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாமக தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும் சென்னை நோக்கி கார் உள்பட பல்வேறு வாகனங்களில் சென்னை நோக்கி வந்தனர். அவர்களை சென்னை எல்லையான பெருங்களத்தூர் சோதனைச்சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும், பாமகவை சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகள் மட்டுமே சென்னைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். எஞ்சிய பாமக கட்சி தொண்டர்களை திருப்பி அனுப்பும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், தங்களையும் சென்னைக்குள் செல்ல அனுமதிக்கக்கோரி பாமக கட்சி தொண்டர்கள் பெருங்களத்தூர்- ஜிஎஸ்டி நெடுச்சாலையின் இரு புறமும் திரண்டு திடீரென முதல்வருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இதனால் பெருங்களத்தூரில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவருகிறது. ஜிஎஸ்டி சாலை முழுவது பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் அலுவலகம் செல்வோர் உள்பட பலரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.