ஆர்வக்கோளாறான நடவடிக்கை கூடாது கமல்...! பாமக நிறுவனர் ராமதாஸ் அட்வைஸ்!
காவிதி நதிநீர் பிரச்சனை பற்றி, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை, மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் சந்தித்திருப்பது ஆர்வக்கோளாறில் செய்யப்படும் நடவடிக்கை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை இன்று சந்தித்தார். அப்போது காவிரி விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதன் பிறகு, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, கமல் ஹாசன் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர், காவிரி பிரச்சினையை இரு மாநில விவசாயிகளுக்கும் பிரச்சனை இல்லாமல் மீண்டும் பேசித்தீர்க்க வேண்டும் என்றார். திரைப்பட விவகாரங்கள் குறித்து கர்நாடக முதலமைச்சருடன் பேசவில்லை என்றும் சினிமாவை விட காவிரிதான் முக்கியம் என்றும் கூறினார்.
காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர், மீண்டும் பேச்சுவார்த்தை எதற்கு என்று பல்வேறு தலைவர்களும், விவசாய சங்க தலைவர்களும் கண்டித்துள்ளனர். இது குறித்து கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், விவசாய பிரதிநிதிகள் என்று யார் அவரை கர்நாடகாவுக்கு அனுப்பியது என்றும் கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், காவிரி நதிநீர் பிரச்சனை பற்றி பேசிய கமல் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார்.
அதில், கர்நாடக முதலமைச்சரை கமலஹாசன் இன்று சந்தித்து காவிரி சிக்கல் குறித்து பேச்சு நடத்துகிறார். காவிரி சிக்கலில் பேச்சு கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆர்வக்கோளாறில் செய்யப்படும் சில நடவடிக்கைகள் ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்று ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.