விக்கிரவாண்டி தேர்தலில் அதிமுக வெல்வதன் மூலம் பாமகவுக்கும் அது பலம் சேர்க்கும். வன்னியர் பகுதியில் பாமக செல்வாக்கோடு இருப்பதையும் நிரூபிக்கவும் முடியும். அது 2021 பொது தேர்தலுக்கு பெரிய அளவில் உதவும் என்பதால், அதிமுக வெற்றியைப் பார்க்க பாமகவும் ஆவலோடு காத்திருக்கிறது.
அதிமுகவை போலவே அதன் கூட்டணி கட்சியான பாமகவும் இடைத்தேர்தலில் தன்னுடைய செல்வாக்கை நிரூபிக்கும் நிலையில் உள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றால் மட்டுமே பாமகவின் செல்வாக்கும் கூடும்.

இடைத்தேர்தல் நடக்கும் இரு தொகுதிகளில் விக்கிரவாண்டி வட மாவட்டத்தில் வருகிறது. ‘வன்னியர்கள் பெல்ட்’ என்று அழைக்கப்படும் பகுதியில் இடைத்தேர்தல் வருவதால், பாமகவின் மீதும் அரசியல் பார்வை பதிந்துள்ளது. இடைத்தேர்தலில் அதிமுக வெல்வதன் மூலமே வன்னியர் சமுதாயம் தங்கள் பின்னாள் உள்ளது என்பதையும் எதிர்கால சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னுடைய நிலையை உயர்த்திக்கொள்ளவும் பாமகவால் முடியும்.


பாமகவின் எதிர்பார்ப்பு குறித்து திமுக நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக எங்களுடன்தான் இருந்தது. ஆனால், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வெற்றி பெறவில்லை. பாமக வாக்கு எங்களுக்கு உதவவில்லை. அதிமுக கூட்டணியில் இடதுசாரிகள் வெற்றி பெற்றனர். அந்தந்த நேரத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைதான் வெற்றியைத் தீர்மானிக்கும். நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் பாமகவைவிட அதிக வாக்குகளை விசிக பெற்றிருந்தது. 22 இடைத்தேர்தலில் திமுக 13-ல் வெற்றி பெற்றது. வன்னியர்கள் நிறைந்துள்ள வேலூரில் தனியாக நடந்த தேர்தலில் வெற்றி பெற்றோம். விக்கிரவாண்டியிலும் நாங்களே வெற்றி பெறுவோம்” என்று அந்த நிர்வாகி தெரிவித்தார்.