ஒட்டுமொத்த தமிழர்களையும் ஒரு வார்த்தையில் ஈர்த்த பிரதமர் மோடி...!
உலகின் பழமையான மொழியை கொண்ட மாநிலம் தமிழகம். இந்தியாவின் மூத்த மொழி தமிழ் மொழி. உலகின் மிக பழமையான மொழியான தமிழை போற்றுவோம். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க கல்விச்சாலை, நாம் எல்லாம் தமிழகத்தில் இருக்கிறோம். ஐஐடி மாணவர்கள் நாட்டின் தூண்களாக திகழ்கின்றனர். இந்தியா தொழில்நுட்பத்தில் வேகமாக முன்னேறி வருகிறது.
உலகின் மிகப் பழமையான மொழி தமிழ்மொழி என சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
சென்னை ஐஐடியின் 56-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்த விழாவில் மாணவர்கள், வேட்டி-சட்டை அணிந்தும், மாணவிகள் புடவை மற்றும் சுடிதார் அணிந்தும் வந்து பட்டங்களை பெற்றனர்.
விழாவில், பேசிய பிரதமர் மோடி இளைஞர்களின் உத்வேகம் உற்சாகம் அளிக்கிறது. உங்களுடைய பெற்றோர்களை நான் வாழ்த்துகிறேன். அவர்கள் தான் உங்களை இந்த நிலைக்கு உயர்த்தி உள்ளார்கள். அவர்களுடைய தியாகம் உங்களை வளர்த்திருக்கிறது. இளைஞர்களின் கண்களில் ஒளியை காண்கிறேன். உங்களின் வெற்றியில் பெற்றோர்களின் உழைப்பு உள்ளது என்றார்.
மேலும் பேசுகையில், உலகின் பழமையான மொழியை கொண்ட மாநிலம் தமிழகம். இந்தியாவின் மூத்த மொழி தமிழ் மொழி. உலகின் மிக பழமையான மொழியான தமிழை போற்றுவோம். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க கல்விச்சாலை, நாம் எல்லாம் தமிழகத்தில் இருக்கிறோம். ஐஐடி மாணவர்கள் நாட்டின் தூண்களாக திகழ்கின்றனர். இந்தியா தொழில்நுட்பத்தில் வேகமாக முன்னேறி வருகிறது.
உங்களுடைய ஐஐடியின் முன்னாள் மாணவர்கள் பல சாதனைகளை படைத்துள்ளனர். இந்தியர்களின் முயற்சி, உழைப்பு, தன்னம்பிக்கை கண்டு உலகமே வியக்கிறது. உலக அளவில் முன்னணியில் இருக்கும் இந்தியர்கள் ஐஐடியில் படித்தவர்கள் தான். உலக முழுவதும் இந்திய சமுதாயம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.