கேரளாவை நினைச்சா… ரொம்ப கஷ்டமா இருக்கு… உருகி ஒரு டுவீட் போட்ட பிரதமர் மோடி
கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலர் பலியானது வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி உருக்கமுடன் டுவிட் போட்டுள்ளார்.
டெல்லி: கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலர் பலியானது வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி உருக்கமுடன் டுவிட் போட்டுள்ளார்.
கேரளாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர்ந்து 2 நாட்களாக மழை அம்மாநிலத்தில் விட்டபாடில்லை. எர்ணாகுளம், மலப்புரம், கண்ணூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் மழையின் பிடியில் சிக்கி உள்ளன.
புரட்டி எடுத்து வரும் பேய் மழையால் கேரளாவே ஸ்தம்பிக்கும் நிலைக்கு போயிருக்கிறது. தொடர் மழையால் முல்லை பெரியாறு, இடுக்கி உள்ளிட்ட அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது.
கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். தற்போதுள்ள நிலவரப்படி 18 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந் நிலையில், கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலர் பலியானது வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி உருக்கமுடன் கூறி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்து உள்ளதாவது:
கேரளாவில் தொடரும் கனமழை, நிலச்சரிவு ஆகியவற்றில் பலர் பலியான நிகழ்வு மனதுக்கு வருத்தமாக உள்ளது. பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்து உள்ளார். முன்னதாக கேரள முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி அங்குள்ள நிலவரம் பற்றி கேட்டறிந்தார்.