- Home
- Politics
- விளம்பரமா..? செயல்பாடா..? சவுராஷ்டிரா சமூகத்தில் யாருக்கு வாய்ப்பு..? திமுகவை வீழ்த்த பாஜகவின் பவர் கணக்கு..!
விளம்பரமா..? செயல்பாடா..? சவுராஷ்டிரா சமூகத்தில் யாருக்கு வாய்ப்பு..? திமுகவை வீழ்த்த பாஜகவின் பவர் கணக்கு..!
ஏ.ஆர். மகாலட்சுமி ஒரு காலத்தில் நட்சத்திர வேட்பாளராகப் பார்க்கப்பட்டார். ஆனால், இன்று கட்சிக்குள்ளும், சமூக மக்கள் மத்தியிலும் அவர் செல்வாக்கை இழந்து வருவது, மதுரை தெற்கு தொகுதியில் அவர் மீண்டும் களம் இறங்குவதைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

யார் அந்த தெற்கு தொகுதி நாயகன்?
மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய அரசியல் களம், வரப்போகும் தேர்தலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறது. "யார் அந்த 'தெற்கு' தொகுதி நாயகன்?" என்கிற கேள்விக்கு விடை தேடினால், அங்கு பல சுவாரஸ்யமான திருப்பங்களும், சாதிய கணக்குகளும், மக்களின் குமுறல்களும் ஒளிந்துள்ளன.
மதுரை தெற்கு தொகுதி மக்களின் மனநிலை எப்போதும் ஒரு புதிர்தான். கடந்த கால தேர்தல் முடிவுகளைப் பார்த்தால், வெற்றி பெற்றவருக்கும் இரண்டாம் இடம் பிடித்தவருக்குமான வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாகவே இருக்கும். 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் போட்டியிட்ட பூமிநாதன், வெறும் 5,000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் நூலிழையில் வெற்றி பெற்றார். இந்தச் சொற்ப இடைவெளிதான் இப்போது எதிர்க்கட்சிகளுக்குப் பெரும் நம்பிக்கையைத் தந்து கொண்டிருக்கிறது. இந்த தொகுதியைக் கைப்பற்ற பிரதான கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
திமுக சார்பில் மதுரை காமராஜர்புரம் வி.கே.குருசாமியின் மருமகனும், திமுக மாணவரணி அமைப்பாளருமான முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த முகேஷ்சா்மா, மறவர் சமூகத்தின் முன்னாள் எம்.எல்.ஏ வி.வேலுசாமி, திமுக கூட்டணியில் மதிமுக மதுரை தெற்கு தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ பூமிநாதன் வாய்ப்பு கேட்டு வருகின்றனர். பூமிநாதனும் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்.
கே.கே.சீனிவாசனுக்கா? ஏ.ஆர்.மகாலட்சுமிக்கா?
அதிமுக சார்பில், செளராஷ்டிரா சமூகத்தை சார்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.எஸ்.சரவணன், பிள்ளைமார் சமூகத்தை சார்ந்த அதிமுக நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ்.டி.ஜெயபால், நாடார் சமூகத்தவரான அதிமுக மாவட்ட பொருளாளர் ப.குமார்,
மதுரை கிழக்கு மண்டல கவுன்சிலரும் முக்குலத்தோருமான சண்முகவள்ளி, அதே முக்குலத்தோரான அதிமுக ஐ.டி.விங் பிரிவின் செல்வகுமார் ஆகியோர் சீட் ரேஸில் உள்ளனர்.
பாஜக சார்பில் செளராஷ்டிரா சமூகத்தவரான முன்னாள் மாவட்ட தலைவர் கே.கே.சீனிவாசன், அதே சமூகத்தவரான தேசிய செயற்குழு உறுப்பினர் ஏ.ஆர்.மகாலட்சுமி சீட்டு கேட்டு வருகின்றனர். இந்த தொகுதியை என்.டி.ஏ கூட்டணியில் பாஜக கேட்டு வருகிறது. பாஜக வேட்பாளரே இங்கு போட்டியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகையால், பாஜகவில் சீட்டு கே.கே.சீனிவாசனுக்கா? அல்லது ஏ.ஆர்.மகாலட்சுமிக்கா என்கிற இருமுனைப்போட்டி நிலவுகிறது.
இதுகுறித்து சவுராஷ்டிர சமூக மக்கள் கூறுகையில், ''மதுரை தெற்கு தொகுதியில் திமுகவோ அல்லது திமுக கூட்டணி கட்சிகளோ நின்றால் நிச்சயமாக வெல்ல முடியாது. காரணம் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது இந்தப் பகுதியில் வசிக்கும் வடநாட்டவர்களை (சேட்டு) மிரட்டி இருக்கிறார்கள். இந்த தொகுதியில் மட்டும் வடநாட்டவர்கள் 12 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். கடந்த முறை திமுக கூட்டணியில் மதிமுகதான் ஜெயித்தது. ஆனாலும் நீங்கள் ஏன் ஓட்டு போடவில்லை என்று நேரடியாகவே போய் திமுகவினர் பலரையும் மிரட்டி இருக்கிறார்கள். பூமிநாதன் வெறும் 5 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தான் வெற்றிபெற்றார்.
திமுகவுக்கு வாய்ப்பில்லை
எங்களுக்கு ஓட்டு போடாத உங்கள் பகுதியில் எந்த வேலையும் செய்து தர மாட்டோம் எனக் கூறிய அவர்கள் இப்போது வரை லட்சுமிபுரம் போன்ற பகுதிகளில் இந்த ஐந்து ஆண்டுகளாக ரோடு போடவே இல்லை. திமுகவினர் அவர்களுக்கு நிறையவே இடைஞ்சல் செய்து வருகிறார்கள். அதே மாதிரி என்னென்ன இடைஞ்சல் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்திருக்கிறார்கள். இதனால் மார்வாடி குடும்பங்கள் திமுக- கூட்டணி கட்சிகள் மீது கடும் கோபமாக உள்ளது. ஆகையால் இந்த முறை என்.டி.எ கூட்டணிக்கு தான் வாக்களிப்பார்கள்.
அதே நிலைமைதான் இந்தப் பகுதியில் சௌராஷ்டிரா மக்களுக்கும். அவர்கள் திமுகவுக்கு ஓட்டு போடமாட்டார்கள் என வெளிப்படையாகவே தெரியும். ஆகையால் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் பல வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இப்படி எவ்வளவு கஷ்டப்படுத்த முடியுமோ படுத்துகிறார்கள். சௌராஷ்டிரா மக்களையும் அவர்கள் துன்புறுத்துகிறார்கள். சௌராஷ்டிரா மக்கள் பாஜக- அதிமுகவுக்கு ஓட்டு போடுகிறவர்கள். பிஜேபி இல்லையென்றால் அதிமுகவுக்கு சௌராஷ்டிரா மக்கள் வாக்களிப்பார்கள். நிச்சயமாக திமுகவுக்கு போட மாட்டார்கள்.
‘‘எங்களுக்கு நீங்கள் ஓட்டு போட மாட்டீர்கள். நாங்கள் ஏன் உங்களுக்கு நல்லது செய்ய வேண்டும்? என்று கேட்கிறார்கள். மார்வாடிகளுக்கு தொழில் ரீதியாக பிரச்சனை கொடுக்கிறார்கள். இந்தப் பகுதி எம்எல்ஏ மதிமுகவை சேர்ந்தவர். ஆனால், அவர் டம்மியாகவே வைக்கப்பட்டுள்ளார். திமுக ஆட்கள் தான் முன் நின்று செய்கிறார்கள். பூமிநாதன் ஓபிஎஸ் போலத்தான். எதுவும் பேச மாட்டார். அமைதியாக இருப்பார். பெயருக்குத்தான் அவர் எம்எல்ஏ. அவர் ஆக்டிவாக இல்லை.
திமுக கவுன்சிலர்களின் அடாவடி
திமுக கவுன்சிலர்கள் தான் இந்த பகுதியில் தொகுதியில் ஆட்டம் போடுகிறார்கள். ஒரு கவுன்சிலருக்கு கிடைக்கும் மரியாதை கூட எம்.எல்.ஏ பூமிநாதனுக்கு கிடைப்பதில்லை. அவர் கவுன்சிலரைவிட குறைத்து மதிப்பிடுகிறார்கள். பேருக்கு சைக்கிள் கொடுப்பது, லேப்டாப் கொடுப்பது என அங்கங்கே தென்படுவார்.
ஒட்டு மொத்தமாக மதுரையில் திமுக வெற்றிபெற்ற பகுதிகளில் செயல்பாடுகள் சரியில்லை என்கிறார்கள். திமுக கவுன்சிலர்களின் அடாவடிகளால் மக்கள் கடுமையாக கொந்தளிக்கிறார்கள். மதுரை தெற்கு தொகுதியில் அதிமுக- பாஜக தனித் தனியாகவே செல்வாக்காக உள்ளது. ஆகையால் இந்த கூட்டணியில் இரு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களில் ஒருவர் களமிறங்கினால் வெற்றி பெறலாம். வலுவான வேட்பாளராக, பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த வேட்பாளரை களமிறக்கி, இரு கட்சி நிர்வாகிகளும் ஒற்றுமையாக களப்பணியாற்றினால் வெற்றி பெறலாம். திமுக கூட்டணிக்கு இது சிக்கலான தொகுதி என்பதால் அவர்கள் ஓட்டுக்கு பணத்தை வாரி இறைக்க தயாராகவே இருக்கிறது. அந்த வகையிலும் இறங்கி அடித்தால் இங்கு அதிமுக-பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.
பாடாய்ப்படுத்தும் போலி பில்
திமுகவோ, அதன் கூட்டணியோ மதுரை தெற்கு தொகுதியில் வெற்றி பெறுவது மிக மிக கம்மியான வாய்ப்பு தான். இங்கே குப்பை அள்ளுவது கிடையாது. அடிப்படை வசதிகள் எதையும் செய்வதில்லை. சரியான முறையில் தெரு மின்சார விளக்குகள் எரிவதில்லை. அதுபோக மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இந்தப் பகுதியில் கடைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளன. அவர்களிடம் மாநில வரியை வாங்கிக்கொண்டு பில் கொடுப்பதில்லை. அதற்குப் பதிலாக போலி பில் கொடுக்கிறார்கள். போய் கேட்டோம் என்றால் உங்கள் மீதுதான் நடவடிக்கை எடுப்போம். நீங்கள் போலி பில் வைத்திருக்கிறீர்கள். போய் கேட்டால் உங்களுக்குத் தான் பிரச்சினை என அவர்களே மிரட்டுகிறார்கள்.
வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் செளராஷ்டிரா சமுதாயம்
பாஜகவில் ஏ.ஆர்.மகாலட்சுமி நன்றாகத்தான் செயல்படுகிறார். அவர் சௌராஷ்ட்ரா பெண்மணி. நிறைய நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். ஆனால், இப்பகுதியில் பாஜக வலிமையாக இருக்கக் காரணமாக இருப்பவர் கே.கே. சீனிவாசன். மிகவும் அமைதியான ஆள். மிகவும் வசதி படைத்தவர். அவருக்கு மேலிடத்தில் மோடி, அமித் ஷாவிடம் நல்ல மரியாதை இருக்கிறது. மோடி, அமித் ஷா வரை பேசக்கூடியவர் . எளிமையாக எல்லோரிடம் நடந்து கொள்வார்.
இங்கு முக்குலத்தோா், செளராஷ்டிரா சமூக மக்கள் அதிகளவில் உள்ளனா். இதில் செளராஷ்டிரா சமுதாயத்தினா்தான் வெற்றி, தோல்வியைத் தீா்மானிக்கக் கூடிய சக்தி. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2-ஆம் இடம்பெற்ற பாஜக, அதிமுகவைவிட 15,263 வாக்குகள் கூடுதலாகப் பெற்றது. சில வருஷங்களாக பாஜக இங்கு செல்வாக்குப் பெற்று வருகிறது. பாஜக மதுரை மாவட்டம் முழுவதும் தனது உட்கட்சிக் கட்டமைப்பிலும், விரிவாக்கத்திலும் தொடர்ந்து பல ஆண்டுகளாக கவனம் செலுத்தி வருகிறது. இதனால் கட்சியின் வாக்கு சதவிகிதம் அதிகரித்து வருகிறது.
யாருக்கு வாய்ப்பு?
பாஜக சார்பில் மாவட்ட தலைவர் கே.கே.சீனிவாசன் போட்டியிட்டால் ஓரளவுக்கு பலன் கொடுக்கும். ஏ.ஆர்.மகாலட்சுமிக்கு இங்கு யாரும் ஓட்டு போட தயாராக இல்லை. ஆனாலும், மகாலட்சுமி பலமாக வேலை செய்து வருகிறார். எப்படியாவது இங்கு போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறார். அவர் தலைக்கனம் என்று சொல்வார்களே அது போல் நடந்து கொள்வார். ரொம்ப இறங்கிப் போய் எல்லாம் வேலை செய்ய மாட்டார். எளிமையாக பழகவும் மாட்டார். அவரெல்லாம் நின்றால் பெரிதாக எடுபடாது. பாஜகவை சேர்ந்த கே.கே.சீனிவாசனை எல்லோருக்கும் தெரியும். மகாலட்சுமி தெற்கு தொகுதியில் தான் வசிக்கிறார். ஆனாலும் அவரை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி பெற முடியுமா? என்பது சந்தேகம்தான்.
பேராசிரியர் ராம.சீனிவாசன் திருப்பரங்குன்றம் தொகுதியைக் கேட்டு வருகிறார். அங்கு கிடைக்காத பட்சத்தில் மதுரை தெற்கில் போட்டியிட விரும்புகிறார். ஆனால், பாஜக தலைமை சவுராஷ்டிரா சமூகத்தை முன்னிருத்த வேண்டும் என்பதால் அச்சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கே வாய்ப்பளிக்க முடிவெடுத்துள்ளது. அந்த வகையில் முன்னிலையில் சௌராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த மாவட்டத்தலைவர் கே.கே.சீனிவாசன், அல்லது ஏ.ஆர் மஹாலட்சுமி இருவரில் ஒருவருவருக்கு வாய்ப்பு நிச்சயம்.
அழைத்து வந்தவருக்கே உதாசினம்..?
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட்டு வாங்கிய வாக்குகளை விட பாஜக- அதிமுக வாங்கிய வாக்குகள் அதிகம். பாஜக 42 ஆயிரம் வாக்குகள் வாங்கியது. அதிமுக 26000 வாக்குகள் பெற்றது. ஏன் பாஜக அதிக வாக்குகள் வாங்குகிறது என்றால் இப்பகுதியில் வாழ்கிற சவுராஷ்ட்ரா மக்கள் தான் காரணம்.
செளராஷ்டிரா சமூகத்தின் ஏ.ஆர்.மகாலட்சுமி அதிக நலத்திட்ட கூட்டங்களை நடத்தி தொகுதியில் நன்கு அறிமுகமானவர். இவருக்கு பொன்ராதாகிருஷ்ணன், தமிழிசை, வானதி சீனிவாசனின் ஆதரவு உள்ளது. பாஜகவை சேர்ந்த கே.கே.சீனிவாசன், ஆர்.எஸ்.எஸ் பின்புலம் உள்ள கோடீஸ்வரர். தனக்கு சொந்தமான ரூ.3 கோடி இடத்தை, சில லட்சம் ரூபாய்க்கு பாஜக அலுவலகம் கட்டக் கொடுத்தவர். மாவட்ட தலைவர், மாவட்ட அமைப்பு செயலாளராக இருந்தவர்.
மதுரை மீனாட்சி அறுவடை திருவிழாவில் பட்டியல் சமூக மக்கள் 5 ஆயிரம் பேரை அழைத்து தனது சொந்த பணத்தில் ஆண்டு தோறும் விருந்து அளிக்கிறார். சொந்த வீடு இல்லாமல் இருக்கும் அப்பளத் தொழிலாளிகளுக்கு மதுரை, சிந்தாமணி பகுதியில் தனது தந்தை கண்ணன் பெயரில் கண்ணன் காலணியை உருவாக்கி வீடுகட்டி குறைந்த வாடகையில் வீடுகளை வழங்கி உள்ளார்.கடந்த 30 ஆண்டுகளாக கட்சியில் இருந்து வருகிறார். அவரே போட்டியிட வேண்டும்.
பின்புலத்தில் செயல்பட்ட கே.கே.சீனிவாசன்
2011 கவுன்சிலர் தேர்தலுக்காக ஆர்.மகாலட்சுமியை கட்சிக்கு அழைத்து வந்தவரே கே.கே.சீனிவாசன்தான். அதற்கு முன் மகளிர் அமைப்பின் தலைவியாக இருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து மாநிலத்தின் பாஜக மகளிர் அணி செயலாளரானார். அவரை பொன். ராதாகிருஷ்ணனிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்ததே கே.கே.சீனிவாசன் தான். மகாலட்சுமி மகளிர் அணி தலைவியானது எப்படி என்றால் அந்த காலகட்டத்தில் கட்சியில் மகளிர்கள் அதிக அளவில் இல்லை. ஆகையால் மகாலட்சுமி பாஜகவுக்கு வந்தவுடன் எல்லா பதவிகளும் கிடைத்தது. மகாலட்சுமியும் அதை பயன்படுத்தி அதிவேகமாக வளர்ந்தார். 2016 சட்டமன்ற தேர்தலில் மகாலட்சுமி எம்எல்ஏ வேட்பாளராக தெற்கு தொகுதியில் போட்டியிட்டார்.
அப்போது தெற்கு தொகுதி பொறுப்பாளராக கே.கே.சீனிவாசன் தான் இருந்தார். அப்போது 16 ஆயிரம் ஓட்டுகள் வாங்க வைத்தார். அந்த காலகட்டத்தில் தான் பேராசிரியர் ராம. சீனிவாசன் கட்சிக்கு வந்தார். அதற்கு முன்பு அவர் சுதேசி சங்கத்தில் இருந்தார். அந்த தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த எஸ்.எஸ்.சரவணன் தான் வெற்றி பெற்றார். அதேபோல் தெற்கு தொகுதியில் திமுக சார்பாக மல்லிகை பாலன் என்பவர் போட்டியிட்டார். அவரும் 25 ஆயிரம் ஓட்டுகள் தான் வாங்கினார். அப்போது அதிமுக தனியாக நின்று ஜெயித்தது. மதிமுக சார்பில் பூமிநாதன் நின்றார். அனைத்து கட்சியிலும் சௌராஷ்டிரா வேட்பாளர்கள் நின்றாலும் கூட பாஜகவை நிறுத்தி தனியாக நிறுத்தி 16,000 வாக்குகள் பெற்றார் மகாலட்சுமி. அதற்கு காரணம் கே.கே.சீனிவாசன்.
பாஜகவின் முடிவு என்ன..?
அதன் பிறகு மகாலட்சுமி முன்னணிக்கு வந்தார். அடுத்து மகாலட்சுமி தலைமையிபோது கடைசி ஏழு, எட்டு வருடங்களாக அவர் சறுக்கலில் இருக்கிறார். மாநில துணைச் செயலாளராக இருந்தவர், மாநில மகளிர் அணி தலைவியாக இருந்தவர், அதற்கடுத்து பொதுக்குழுவில் போட்டார்கள். பொதுக் குழுவில் இருந்து மாநில செயற்குழுவிற்கு இறங்கிவிட்டார். இப்போது எல்லா வகையிலும் இறங்கு முகத்தில் இருக்கிறார். இப்போது அவரது ஆதிக்கம் செல்லுபடியாகவில்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மகாலட்சுமி மதுரை எம்.பி தொகுதியில் போட்டியிட ஆர்வமாக இருந்தார். அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட அதிருப்தியில் தேர்தல் வேலை செய்யாமல் ஒதுங்கிக் கொண்டார்.
கட்சியிலும் சவுராஷ்டிரா சமூக மக்களிடமும் செல்வாக்காக இருக்கும் கே.கே.சீனிவாசன் வெளியில் தெரியாமல் இருப்பதற்கு காரணம் அவர் ஆர்.எஸ்.எஸ் பின்னணியில் வந்தவர். பொதுவாக ஆர்.எஸ்.எஸ் பின்புலத்தில் இருந்து வந்தவர்கள் விளம்பரத்தை விரும்பாதவர்கள். விளம்பரம் தேடிக் கொண்டால் ஒதுக்கப்படுவார்கள். விளம்பரம் செய்வதற்காக நீ ஏன் ஆர்எஸ்எஸ் -க்கு போகிறாய் என்று கேட்பார்கள். விளம்பரம் என்பது ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுக்கு என்றுமே கிடையாது. சௌராஷ்ட்ரா மக்களிடையே பாஜக இப்போது செல்வாக்காக இருக்க காரணம் கே.கே.சீனிவாசன் தான். அவர் முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பாஜகவுக்காக வேலை செய்து வருகிறார்.
திமுக மீதான மக்களின் அதிருப்தி
பாஜகவில் மதுரை, அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் பாஜக பொதுக்கூட்டங்கள் நடைபெற்றால் அதை முன்னின்று நடத்தும் பொறுப்பை ஏற்று செய்து வருபவர் கே.கே.சீனிவாசன். இப்போது பிரதமர் மோடி மதுரை கலந்து கொண்ட நிகழ்ச்சிகளையும் அவரே முன்னின்று செய்து வருகிறார். ஏ.ஆர்.மஹாலட்சுமி, கே.கே.சீனிவாசன் இந்த இருவரில் கே.கே.சீனிவாசன் கட்சியின் சீனியர். மென்மையானவர். எளிமையாக பழகுபவர். தொகுதி மக்களிடம் நற்பெயர் பெற்றவர் என்பதால் அவருக்கு சீட் கொடுத்தால் வெற்றி வாய்ப்பு நிச்சயம்'' என்கிறார்கள் அப்பகுதி மக்கள். இந்த முறை கே.கே.சீனிவாசனை போட்டியிட வைக்க பாஜக தலைமையும் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மதுரை தெற்கு தொகுதியைப் பொறுத்தவரை திமுக கூட்டணிக்கு இந்த முறை கடும் சவால் காத்திருக்கிறது. பணபலம் ஒரு பக்கம் இருந்தாலும், திமுக மீதான மக்களின் அதிருப்தி பாஜக - அதிமுக கூட்டணி வேட்பாளருக்கு சாதகமாக முடிய வாய்ப்புள்ளது. சௌராஷ்டிரா மக்களின் முழு ஆதரவைப் பெறும் வேட்பாளரே தெற்கின் கோட்டையைப் பிடிக்க முடியும். தற்போதுள்ள சூழலில், கட்சி மேலிடமும் மக்களும் கே.கே.சீனிவாசன் பக்கமே சாய்வதாகத் தெரிகிறது.
