ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் குறித்த வழக்கு; உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி செம்மலை மனு! அதிமுகவினர் அதிர்ச்சி!
ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என செம்மலை எம்.எல்.ஏ. மனு தாக்கல் செய்துள்ளார். செம்மலையின் இந்த நடவடிக்கை அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும்போது, எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். பிரதான எதிர்கட்சிகள் இல்லாத நிலையில், ஓட்டெடுப்பு நடந்தது. பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களை தகுதி இழப்பு செய்யக்கோரி சென்னை, உயர்நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்திருந்தது. திமுக தாக்கல் செய்த இந்த மனு, தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
சசிகலாவுக்கு எதிராக ஓ. பன்னீர் செல்வம் போர்க்கொடி தூக்கினார். .ஒபிஎஸ்-க்கு ஆதரவாக செம்மலை, உள்ளிட்ட எம்எல்ஏக்கள் உடனிருந்தனர். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைந்தபோது தமக்கு அமைச்சர் பதவியை செம்மலை எதிர்பார்த்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் செம்மலை, உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு எதிராக 11 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.
கட்சி கொறடா உத்தரவை மீறி வாக்கறித்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று மெனுவில் செம்மலை கூறியுள்ளார்.
உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கை, உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற கோரி செம்மலை மனு தாக்கல் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.