peoples needs buttermilk in summer ordered ddv dinakaran admk
"கோடையை சமாளிக்க மோர் பந்தல்கள் அமைக்க வேண்டும்" - அதிமுகவினருக்கு டிடிவி அன்பு கட்டளை

அதிமுகவினருக்கு அன்பு கட்டளையாக, அதிமுக துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன், அறிக்கை விடுத்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:-
வறட்சியோடு தொடங்கும் கோடை காலத்தை சமாளிக்க, தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், மக்கள் எவ்வித பாதிப்பு அடையாமல் பாதுகாக்கப்படுவார்கள். அதே நேரத்தில், புவி வெப்பமயமாதலால், இயற்கை சுழற்சியில் ஏற்பட்டுள்ள தட்ப வெப்ப மாறுபாடுகள், ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே செல்கிறது.
இதுபோன்ற கோடை காலத்தின் கொடிய வெப்பத்தை சமாளிக்க, அ.தி.மு.க. சார்பில் ஆங்காங்கே நீர் மோர், தண்ணீர் பந்தல்களை திறக்க வேண்டும் என ஆண்டுதோறும் ஜெயலலிதாவின் அன்பு கட்டளையை ஏற்று, அதிமுக தொண்டர்கள் செய்து வந்தனர் என்பது பெருமைக்குரிய விஷயம்.
படிப்பூட்டும் பள்ளியிலும், பக்தியூட்டும் ஆலயங்களிலும்கூட அன்னமிட்டே வளர்ந்த அ.தி.மு.க.வின் தொண்டு உள்ளத்தால் இந்தாண்டு கோடை காலத்திலும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் நீர் மோர்,
தண்ணீர் பந்தல்களை ஆங்காங்கே அமைத்து வெப்பத் தவிப்பில் இருந்து தமிழக மக்களுக்கு இளைப்பாறுதல் தரும் புனித தொண்டினை கட்சியின் அனைத்து பிரிவுகளும் களமிறங்கி கனிவோடு செய்திட வேண்டும் என அதிமுக பொது செயலாளர் சசிகலா சார்பில் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
