ஜெ.சிகிச்சை ஆதாரத்தை வெளியிட்ட வெற்றிவேல்...! அதிரடி கேள்விகளை சரவெடியாக வெடித்த அமைச்சர்கள்..!
சசிகலா குடும்பத்தின் சதியை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றும் உள்நோக்கத்தோடு ஜெ.சிகிச்சை வீடியோவை வெளியிட்டுள்ளனர் எனவும் அமைச்சர்கள் கூட்டாக பேட்டியளித்துள்ளனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. ஓராண்டாக ஜெ மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் பேசப்பட்டு வருகின்றன. இதனால் ஜெ.மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஓராண்டிற்கு பிறகு தற்போது டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் இன்று ஜெ சிகிச்சை குறித்த வீடியோ வெளியிட்டுள்ளார்.
இது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, காமராஜ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய ஜெயக்குமார் விசாரனை ஆணையம் அமைத்த பிறகு எந்த ஆதாரமாக இருந்தாலும் கமிஷனில் தான் சொல்ல வேண்டும் எனவும் சிகிச்சை பெற்ற வீடியோவை வெளியிட வெற்றிவேலுக்கு யார் அதிகாரம் கொடுத்தது எனவும் கேள்வி எழுப்பினார்.
ஆர்.கே.நகரில் நாளை வாக்குப்பதிவு உள்ள நிலையில் வீடியோ வெளியிட்டது விதிமீறல்தான் எனவும் தேர்தல் விதியை மீறிய டிடிவி தினகரன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் தெரிவித்தார்.
ஜெவின் புகழை சீர்குலைக்கவே சசிகலா தரப்பு செய்த சதியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் எங்களை ஜெயலலிதாவை பார்க்கவிடாமல் சசிகலாவின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர் எனவும் குறிப்பிட்டார்.
ஜெ.சிகிச்சை குறித்து 14 வீடியோக்கள் இருப்பதாக கூறிய நிலையில் ஒரு வீடியோவை மட்டும் வெளியிட்டது ஏன் எனவும் வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரம் வெளியிட வில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
அதிமுக தொண்டர்கள் வேதனைப்படும் வகையில் தினகரன் ஆதரவாளர்கள் செயல்படுகின்றனர் எனவும் சாடினார்.
.