“இதெல்லாம் தப்பு... இப்படியெல்லாம் பண்ணாதிங்க! இது நல்லதுக்கு இல்ல...” எக்கச்சக்க டென்ஷனில் எடியூரப்பா!
காங்கிரஸை புறக்கணித்துவிட்டு பாஜகவைத்தான் மக்கள் ஏற்றுகொண்டுள்ளனர். ஆனால் இந்த காங்கிரஸ் மக்கள் தீர்ப்புக்கு மாறாக ஆட்சிக்கு வர முயல்கிறது என எடியூரப்பா கூறியுள்ளார்.
தற்போது கர்நாடக அரசியலில் முக்கிய திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இவ்வளவு நேரம் முன்னிலை வகித்து வந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக பெரும்பான்மையை இழந்துள்ளது பிஜேபி.
தற்போதைய நிலவரப்படி பாஜக 104 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 78 ; ஜேடிஎஸ் 37 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.
தற்போதைய நிலையில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் யாருடைய ஆட்சி அமையும் என்பதில் சஸ்பென்ஸ் ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலை உருவானவுடன், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர், தேவ கவுடாவுடன் ஆலோசனை நடத்தினர்.
அதேபோல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் இதுகுறித்து பேசினார். கடைசியில், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவர் குமாரசாமியை முதல்வராக ஏற்றுக்கொள்ள தயார் என காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது. இதனையடுத்து இன்று மாலை ஐந்து மணிக்கு இரண்டு கட்சி எம்எல்ஏக்களும் சேர்ந்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளனர்.
இந்த நிலையில் இது குறித்து பிஜேபியின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் பின்வாசல் வழியாக காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர முயல்கிறது. அனைத்து தொகுதிகளுக்குமான முடிவுகளும் வந்த பிறகே ஆளுநர் முடிவு எடுப்பார்.
தனது சொந்த ஊரிலேயே சித்தராமையா தோல்வி அடைந்துவிட்டார். ஆளுவோருக்கு எதிரான மக்களின் மனநிலையே காங்கிரஸில் படுதோல்விக்கு காரணம் என கூறினார்.
மேலும், காங்கிரஸை புறக்கணித்துவிட்டு பாஜகவைத்தான் மக்கள் ஏற்றுகொண்டுள்ளனர். ஆனால் இந்த காங்கிரஸ் மக்கள் தீர்ப்புக்கு மாறாக ஆட்சிக்கு வர முயல்கிறது என்பதால் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை கடுமையாக கண்டிக்கிறோம் என எடியூரப்பா கூறியுள்ளார்.
சரி இவர் சொல்வதைப்போல எடுத்துக் கொண்டாலும் தற்போது ஆட்சி அமைத்துக் கொண்டிருக்கும் கோவா, மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்களில் பாஜக பின்வாசல் வழி அரசியலையே தேர்ந்தெடுத்து ஆட்சிக்கு வந்துள்ளதை என்னவென்று சொல்வது? என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.