ஓபிஎஸ் மற்றும் சசிகலா இடையே நடைபெற்று வரும் அதிகாரப் போட்டியில் ஓபிஎஸ் அணி முன்னேறி வருகிறது. நாளுக்கு நாள் அவருக்கு ஆதரவு பெருகி வருவதால் அந்த அணியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

எம்எல்ஏ க்கள், எம்பிக்கள், அமைச்சர்கள் என ஏராளமானோர் ஓபிஎஸ் ஐ சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். ஆனால் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதன் அடிப்படையில் தான் தற்போது ஒவ்வொருவராக சசிகலாவிடம் இருந்து விலகி வருகின்றனர்.

இந்நிலையில் முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை உருவாக்கி ஜெயலலிதாவிடம் சீட் வாங்கி ராமநாதபுரம் மாவட்டம் திருவாடாணை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகர் கருணாஸ் தொடர்ந்து சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கருணாஸ் "துரோகிகள் தான் பன்னீர் செல்வமுடன் சேர்வார்கள். பன்னீர் செல்வம் ஒரு மோசக்காரன், அவனுக்கு என்ன தகுதியிருக்கு என்று மோசமாக விமர்சனம் செய்தார். சின்னம்மா ஒரு வார்த்தை சொன்னா போதும் கொலை கூட பண்ணுவேன் என்று அவர் மிரட்டும் வகையில் பேட்டியளித்தார்.

மேலும் "ஓட்டுப் போட்டாச்சுல்ல கம்முனு போங்க, சின்னம்மா முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது" என்றும் கூறினார்.

இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருணாஸ் உடனடியாக பதவி விலக வேண்டும் என அந்த தொகுதி மக்கள் அவரை எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக எம்ஜிஆரின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ராமசாமியின் மகன் சீனிவாசன் என்பவர் வெளியிட்டுள்ள நோட்டீசில், தமிழகத்தில் 90 சதவீத தொண்டர்கள் அம்மாவின் ஆசி பெற்ற ஓபிஎஸ் முதலமைச்சராக வர வேண்டும் என விரும்புவதால், எம்எல்ஏ க்கள் அனைவரும் அவரையே தேர்ந்தெடுக்க வேண்டும் என சேட்டுக் கொண்டுள்ளார். இந்த நோட்டீஸ் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் வெளியிட்டுள்ள மற்றொரு நோட்டீசில் நடிகர் கருணாஸ் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.