கண்டுகொள்ளாத கட்சியினர், கடும் கவலையில் சசி: சிவன் கழுத்தின் மகிமையை உணர்கிறதோ பாம்பு!?
அது ஜெயலலிதா உயிரோடு இருந்த காலம்...
போயஸ் கார்டனிலிருந்து ஜெ.,வின் கார் வெளியே வருகையில் அப்படியே சாஷ்டாங்கமாக வளையும் நிர்வாகிகள் சில நொடிகள் கழித்து நிமிரும் போது ஜெயலலிதா அவர்களை கடந்திருப்பார் ஆனால் சசிகலா அவர்களை கவனித்தபடியே செல்வார். அம்மா நம்மை கவனிப்பதை மிஸ் பண்ணிவிட்டோமே என்று எந்த நிர்வாகியும் கவலைப்பட மாட்டார்கள். அவர்களின் எண்ணமெல்லாம் ‘சின்னம்மாவின் கண்ணில் விழுந்தோமா?’ என்பதுதான்.
கையெழுத்து போடும் அதிகாரியின் காலில் விழுவதை விட, அவர் டேபிளில் ஃபைலை கொண்டு போய் வைக்கும் அவரது உதவியாளரை காக்காய் பிடிப்பதுதான் தேர்ந்த அரசியல். அ.தி.மு.க.வில் தேர்ந்த அரசியல் ஞானம் படைத்தவர்கள் எக்கச்சக்க பேர். அவர்கள் அத்தனை பேரும் குனிந்து, பணிந்து டார்கெட் செய்தது சசியைதான். காரணம்?...அ.தி.மு.க.வில் பதவிகள் விஷயத்தில் ஜெயலலிதா கபடி ஆடியததெல்லாம் சசியின் சிக்னலை பார்த்துத்தான்.
தங்களது வழிக்கு ஒத்தே வராத நிர்வாகிகளை செம சிம்பிளாக தட்டி காலி செய்வார்கள். ஜெயலலிதா ஏதாவது காட்டமாக இருக்கும் நேரமாக பார்த்து ’அக்கா அந்த சிவகங்கை மாவட்ட செயலாளர் பப்ளிக்ல ரொம்பவே பெயரை கெடுத்து வெச்சிருக்காராம்.’ என்று டைம் பார்த்து பக்குவமாய் ஒரு யாக்கரை போட்டார் என்றால், சிவகங்கையில் அந்த விக்கெட் அவுட்.
அதேபோல் ஜெ., சந்தோஷமாக இருக்கும் சூழலை கவனித்து ‘அந்த சிவகங்கை மாவட்டத்துக்கு செயலாளர நியமிக்காம இருக்கீங்கக்கா. இந்த ......கூட ரொம்ப நல்லாவே செயலபடுறார்னு ரிப்போர்ட் வருது. உங்களுக்காக அன்னைக்கு பொசுக்குன்னு தீ குளிக்க பாய்ஞ்சிருக்காரு, போலீஸு தடுத்ததால பொழச்சிருக்கார்.’ என்று ஜிலேபியாட்டமாய் தகவலை கொடுத்து நகாசு வேலை செய்து தங்கள் டீமுக்கு தோதான மனிதரை மா.செ.வாக்கிவிடுவார்.
இப்ப சொல்லுங்க யாருக்கு வணக்கம் விழுந்திருக்கும்? ஜெ.,க்கா இல்ல சசிக்கா? ஆங் அதே!....
அப்போ அ.தி.மு.க.வுல சசிகலாவுக்குதான் மரியாதையா, அம்மா...ச்சும்மாதானா? என்று கேட்கப்டாது. மேலே வாசிச்சீங்கன்னா விவரம் புரியும்.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மூன்று பேரும் முன்பு பரப்பன அக்ரஹார சிறையிலிருந்த போது தினம் தினம் ஜெயிலுக்கு வெளியே திருவிழா கூட்டமிருக்கும். ஜெ.,வை பார்ப்பதற்கு துளியளவும் வாய்ப்பு இல்லை என்று தெரிந்தும் கூட அமைச்சர்களும், எம்.பி.க்களும், கழக மாநில நிர்வாகிகளும், இவ்வளவு ஏன் அரசு அதிகாரிகளும் கூட அங்கே வந்து காத்துக் கிடப்பார்கள். பன்னீரை முதல்வராக்கிவிட்ட நிலையில் அரசு அதிகாரிகளோ, அமைச்சர்களோ அரசாங்கத்தை இயக்குவது தொடர்பாக எதையும் ஜெயலலிதாவிடம் கேட்க வேண்டிய அவசியமே இருக்காது. ஆனாலும் செல்வார்கள்.
இந்த கூட்டத்தை நம்பி பரப்பன வாசலில் பானிப்பூரி கடைகளும், சமோசா கடைகளும், ஸ்பீடு பிரியாணி கடைகளும் தாறுமாறாக முளைத்து தட்டு தட்டாக விற்பனையானதும் நடந்தது.
ஆனால் இப்போதும் சசிகலா அதே சிறையிலிருக்கிறார். ஆனால் சிறை வாசலில் எந்த கூட்டமும் இல்லை. எந்த நிர்வாகியும் அங்கே தலைவைத்தும் படுப்பதில்லை. எடப்பாடி தலைமையில் தனி அணி உருவாகும் முன்பாவது சில அமைச்சர்கள் அங்கே போய் நின்று சசியை சந்திக்க முயல்வதாக சீன் காட்டினார்கள்.
ஆனால் ஆட்சியும் நாங்களே, கட்சியும் நாங்களே என்று எடப்பாடி அணி விஸ்வரூபமெடுத்த பிறகு யாரும் அங்கே செல்வதில்லை. கொங்கு மண்டலத்தின் ஆளுகையை விரும்பாத, சசியை கொண்டாடும் தெற்கு மாவட்ட அமைச்சர்களும் கூட அங்கே போகாதது அதிர்ச்சி கலந்த ஆச்சரியமே!
திவாகரன், தினகரன் இருவரும் சசியின் அழைப்பின் பேரில் அல்லது சசியிடம் நேரில் சில தகவல்களை பரிமாறும் அவசியத்தின் பேரில் அங்கே செல்கிறார்கள்.
இதில் தினகரன் அங்கு செல்லும்போது மட்டும் புகழேந்தி அங்கே காத்திருக்கிறார். கூடவே அவருக்கு பெங்களூருதான் சொந்த ஊர் என்பதாலும் அங்கே அவ்வப்போது அவரை காண முடிகிறது. ஜெ., இருக்கும் காலத்தில் புகழேந்தி நின்றாலும் கூட அவரை சுற்றி பெரும் கூட்டம் இருக்கும்.
வி.வி.ஐ.பி.க்கள் சிலரும் சர்வ சாதாரணமாக அவரோடு நிற்பார்கள். ஆனால் இன்றோ மீடியாவுக்கோ, கட்சிக்கோ அறிமுகமில்லாத மிக சாதாரண நபர்கள் சிலருடன், கலர் பேண்ட் சட்டையில் சிறை வாசலில் உட்கார்ந்து தனது மொபைலில் ‘டெம்பிள் ரன்’ விளையாண்டபடி காத்துக் கிடக்கிறார்.
தன்னைக் காண பெரும் கூட்டம் வராவிட்டாலும் கூட பரவாயில்லை அடிக்கடி சில முக்கிய எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வந்து ஆஜராகிவிட்டு போனாலாவது ‘ஈ அம்மா தொட்டம்மாதான்.’ என்று பெங்களூரு சிறை அதிகாரிகள் நம்புவார்கள் என்று சசி விரும்புகிறார். ஆனால் அது நடப்பதில்லை. ‘அக்கா கூடவே இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும், எப்படி இருந்திருப்போம்!’ என்று இளவரசியிடம் சசி கலங்கியதாக தகவல்.
அப்போ அம்மா...ச்சும்மாதானா? என்று இழுத்தவர்களுக்கு இப்போது புரிகிறதா யார் கெத்து என்று?
சும்மாவா எழுதிப் பாடினார் கவியரசர்?!...பரமசிவன் கழுத்திலிருக்கும் போது வேண்டுமானால் பாம்பு கருடனை பார்த்து ‘செளக்கியமா?’ என்று கேட்கலாம். பரமசிவன் இல்லையென்றால் பாம்பை கருடன் அசெளக்கியமாக்கி விடும்.
இதில் யார் பரமசிவன், யார் பாம்பு, யார் கருடன்? புரிகிறதா!...