பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையில் இன்றுவரை பழனிசாமி நாடகம் ஆடி வருகிறார். அதுவும் பகல் வேடம், பச்சைப் பொய் வேடம் போடுகிறார் என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக க.பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றத்திற்கே சென்று தடை வாங்கிய முதல்வர் பழனிசாமி, 'பெங்களூரு வருகையால்' மனக்குழப்பத்திலும், சஞ்சலத்திலும், தடுமாற்றத்திலும், ஏன், என்ன நடக்கப் போகிறதோ என்ற அச்சத்திலும் இருப்பது எல்லோருக்கும் புரிகிறது. அதனால் கூட்டம் தோறும் பிரசாரம் என்ற பெயரில், உண்மைக்கு மாறாக பேசுகிறார். அவரது இயலாமையை மறைக்க, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விவாதத்திற்கு அழைக்கிறார். ஊழல் வழக்கில் ஓடோடிச் சென்று பெற்ற தடையுத்தரவை விலக்கிக் கொண்டு, எங்கு வேண்டுமானாலும் வாருங்கள்; நேருக்கு நேர் பேசுவோம் என்று திமுக தலைவர் ஏற்கனவே கூறி விட்டார்.

அதன் பிறகு அமைதியாக இருந்த முதல்வர் பழனிசாமி இப்போது மீண்டும், 'நேருக்கு நேர் விவாதம்' என்று, குத்துச் சண்டை பயில்வான் போல தொடை தட்டுகிறார். சசிகலா காரில் அதிமுக கொடி கட்டி வரக்கூடாது என்று தனது கீழ் உள்ள காவல்துறைத் தலைவரிடம் சொல்ல அஞ்சிய பழனிசாமி, டிஜிபி அலுவலகத்திற்கு அமைச்சர்களை அனுப்பி, புதுவித நிர்வாக நடைமுறையைக் கையாண்டார். அவர்களோ புகாரைக் கொடுத்து விட்டு வெளியில் வந்து பேட்டி கொடுக்கவே ஒருவருக்கு ஒருவர் பயந்து நடுங்கியதை பத்திரிகையாளர்கள் கண்டு ரசித்தார்கள். 'பெங்களூரு வருகையால்' மிரண்டு, கட்சியை கட்டிக்காக்க முடியாத பழனிசாமி, இப்போது தனது தோல்வியை மறைக்க, திமுக தலைவர் உதவிக்கரம் நீட்டுவாரா என்று பார்க்கிறார்.
பழனிசாமி, நீங்கள் இன்னும் திமுக தலைவரின் உயரத்திற்கு வரவில்லை என்பதை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். முதல்வராக உச்ச நீதிமன்ற தடையை விலக்கிக் கொண்டு வாருங்கள், நாம் இருவரும் நேருக்கு நேர் விவாதிப்போம்! இது ஒருபுறமிருக்க, இலவச மின்சாரம் கேட்டுப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, அவர்கள் மீது தடியடி நடத்தி கொத்துக் கொத்தாக கைது செய்தது அதிமுக ஆட்சி. போராடிய நாராயணசாமி நாயுடுவின் வரலாறு எல்லாம் முதல்வர் பழனிசாமிக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அதனால் விவசாயிகள் மீது திமுக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வழக்கம் போல், 'நான் டெண்டரில் ஊழல் செய்யவில்லை' என்று அப்பட்டமாகப் பொய் கூறுவது போல் ஒரு கோயபல்ஸ் பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கும் பழனிசாமிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

