கடன் வாங்குதல் தப்பு கிடையாது. அந்த கடனை கட்ட கூடிய சக்தி இருந்தால் வாங்கலாம். ஆனால் அதிமுக அரசில் வாங்கிய கடனை எதற்கு செலவழித்தார்கள் என்று புரியவில்லை என விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுக அரசில் வாங்கிய கடனை எதற்கு செலவழித்தார்கள் என்று புரியவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நிர்வாகி இல்ல திருமணத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்றார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- கடந்த 10 ஆண்டுகள் அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் இரண்டு மாதத்தில் அரசு இயந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று கண்டுபிடித்துவிட்டார்கள். அதிமுகவினரை புலனாய்வுத் துறையில் வேண்டும் என்றால் சேர்த்துக்கொள்ளலாம். அவசர கோலத்தில் ஆளுநரிடம் சென்றுள்ளார்கள்.

ஆட்சி வந்து மூன்று மாதம்தான் ஆகியுள்ளது. 100 நாளில் நிதிநிலை அறிக்கையை அறிவித்து உள்ளார்கள். தேர்தலில் தந்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவதாக கூறி முதலில் ஐந்து வாக்குறுதிகள், இந்த நிதிநிலை அறிக்கையில் மூன்று, நான்கு நிறைவேற்றி உள்ளார்கள். கல்வி, மருத்துவம், சுகாதார துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கணினி வழியாக கல்வி கற்க முடியாத ஏழை, நடுத்தர மக்களுக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது. திமுக அரசின் செயல்பாட்டை 100 நாட்களில் தீர்மானிக்க முடியாது. ஓரிரு ஆண்டுகள் தேவை. கடன் வாங்குவது என்பதை குற்றம் சொல்ல முடியாது. கடனை வாங்கி எதற்கு பயன்படுத்துகிறார்கள் என்பது முக்கியம். கடன் வாங்குதல் தப்பு கிடையாது. அந்த கடனை கட்ட கூடிய சக்தி இருந்தால் வாங்கலாம். ஆனால் அதிமுக அரசில் வாங்கிய கடனை எதற்கு செலவழித்தார்கள் என்று புரியவில்லை என விமர்சனம் செய்துள்ளார்.

மேலும், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய வம்சாவளியினர் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்கள் தாயகர் திரும்ப விரும்பினால் அதற்கான வழிவகை செய்ய வேண்டும். ஆப்கானிஸ்தான் மக்கள் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி இருக்க வேண்டும். மனித உரிமைகள், பெண்களுக்கான உரிமை, கல்வி உரிமை, பேச்சுரிமை இவையெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்பக்கூடிய நாடு நம் இந்தியா. ஆனால் ஆப்கானிஸ்தான் நாடு எந்த பாதையில் போகப் போகிறது என்று தெரியவில்லை. சுதந்திரம், பேச்சு, எழுத்து, கல்வி, பெண்ணுரிமை என்ற நோக்கத்தில் ஆப்கானிஸ்தான் நடைபோட வேண்டும் என ப.சிதம்பரம் பேசியுள்ளார்.
