அரசியலில் இருந்தே காணாமல் போய்விடுவார் ஓ.பன்னீர் செல்வம் என்று அ.தி.மு.க. பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் குழப்பமான அரசியல் சூழல் அரங்கேறி இருக்கிறது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூடி, சட்டசபைத் தலைவராக வி.கே.சசிகலாவை தேர்வு செய்து, முதல்வராக அமர்த்த உள்ளனர். அதே சமயம், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணியினர் செயல்படுகின்றனர்.

 இரு பிரிவினரும் தனித்தனியாக ஆளுநர் வித்யா சாகர் ராவை சந்தித்து மனு அளித்துள்ளதால், அடுத்த யார் ஆட்சி அமையும் என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அவைத்தலைவர் மதுசூதனன், ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டதையடுத்து அவரின் அவைத்தலைவர் பதவி பறிக்கப்பட்டு, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் சசிகலாஉத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், அ.தி.மு.க. கட்சியின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது மதுசூதனன்விலகியது குறித்து கேட்டபோது, “ மதுசூதனன் ஒன்றும் அ.தி.மு.க.வில் பெரிய தலைவர் இல்லை. ஆதலால், அவர் விலகியவுடன் ஒரு கூட்டமை அவருடன் போய்விட்டார்கள் என்று கூற முடியாது. அவர் மட்டுமே ஓ.பன்னீர் செல்வத்துடன் சேர்ந்துள்ளார். அவர் தானேசசிகலாவை முன்மொழிந்தார், இப்போது அவரை எதிராக செயல்படுகிறார் '' என்று தெரிவித்தார்.

முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கட்சியின் பொருளாளர் என்ற ரீதியால், கட்சியின் வங்கிக்கணக்கை முடக்கப்போகிறேன் என்று கூறியுள்ளாரே அது குறித்து கேட்டதற்கு, நாஞ்சில் சம்பத் கூறுகையில், “ யாருடைய பேச்சைக் கேட்டு, யாருடைய பேச்சு என்ன?, தி.மு.க.வின் பேச்சைக் கேட்டு ஓ.பன்னீர் செல்வம் செயல்படுகிறார். அவர் அரசியலில் இருந்தே காணாமல் போய்விடுவார்'' எனத் தெரிவித்தார்.