'தலைமை அலுவலகத்துக்கும் பூட்டை போடு..!!' - சசிகலாவுக்கு அடுத்தடுத்து ஆப்பு வைக்கும் ஓபிஎஸ்
அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு அதை ஓபிஎஸ் அணியினர் கைப்பற்ற உள்ளதாக வெளியான தகவலால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. இதையடுத்து இரட்டை இலை சின்னம் தங்களுக்குத் தான் என சசிகலா மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர்.
ஆனால் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கிவைத்தது மேலும் அதிமுக என்ற கட்சியின் பெயரை இரு தரப்பினரும் பயன்படுத்தக்கூடாது எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சசிகலா தரப்புக்கு இது பெரும் பின்னடைவாக உள்ளதால் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் கலக்கத்தில் உள்ளனர்.
சசிகலாவின் நியமனம் செல்லாது என தொடர்ந்த கூறிவரும் ஓபிஎஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்தின் இந்த தீர்ப்பால், ராயப் பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தை கைப்பற்ற முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் ஆணைய உத்தரவுப்படி சட்டரீதியாக கட்சி அலுவலகத்தை முடக்கி வைக்கவும் ஓபிஎஸ் அணியினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை மதுசூதனன் வேட்பு மனு தாக்கல் உள்ளார். இதையடுத்து ஓபிஎஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ஓபிஎஸ், மதுசூதனன், செம்மலை, பாண்டியராஜன், கே.பி.முனுசாமி, உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து தண்டையார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் மதுசூதனன் வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.