ops team ask support from makkal nala koottani
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு மக்கள் நலக்கூட்டணியின் ஆதரவை கேட்க ஒ.பி.எஸ் அணி இன்று மாலை அவர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து வேலைபாடுகளிலும் தமிழக கட்சிகள் தீவிரமாக இறங்கி உள்ளன.
இதில் அதிமுக அணி மூன்று தரப்பாக பிரிந்து ஆர்.நகர் தொகுதி தேர்தலை சந்திக்க உள்ளது.

சசிகலா அணியில் யார் வேட்பாளராக நிற்பார்கள் என அதிமுக குழு முடிவு செய்யும் என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
தீபா அணியில் தானே வேட்பாளராக நிற்க போவதாகவும் அதுவே மக்களின் விருப்பம் எனவும் தீபா அறிவித்துள்ளார்.
ஒ.பி.எஸ் தரப்பில் இன்னும் நான்கு நாட்களில் வேட்பாளர் அறிவிக்கபடுவார்கள் என ஒ.பி.எஸ் ஆதரவாளர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தேமுதிக ஆர்.கே.நகர் தொகுதியில் தனித்து போட்டியிட போவதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
திமுக கட்சியின் வேட்பாளருக்கான நேர்காணல் இன்று நடைபெறுகிறது. மேலும் திமுகவுக்கு காங்கிரஸ் கட்சியும், இந்தியன் முஸ்லிம் லீக் கட்சியும் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளது.

மக்கள் நலக்கூட்டணி தங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே கேட்டிருந்தார். இதற்கு மக்கள் நலக்கூட்டணியில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
இந்நிலையில், மக்கள் நலக்கூட்டணியின் ஆதரவை கேட்டு ஒ.பி.எஸ் அணி இன்று மாலை மக்கள் நலக்கூட்டணி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளது.
