துணை ஜனாதிபதி தேர்தல் - வெங்கையா நாயுடுவுக்கு ஒபிஎஸ் ஆதரவு!!
துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் வெங்கையா நாயுடுவுக்கு தமிழக முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்துள்ளார்.
துணை ஜனாதிபதியாக உள்ள ஹமீது அன்சாரியின் பதவிகாலம் அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது.
இதனால் அடுத்த துணை ஜனாதிபதியின் தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து எதிர்கட்சிகளின் சார்பில் காந்தியின் பேரனாகிய கோபால கிருஷ்ண காந்தியை வேட்பாளராக காங்கிரஸ் தலைமை நிறுத்தியுள்ளது.
இதைதொடர்ந்து திமுகவிடமும் அதிமுகவிடமும் கோபால கிருஷ்ண காந்தி ஆதரவு கோரினார்.
இது குறித்து அதிமுக எடப்பாடிக்கும், பன்னீர்செல்வத்திற்கும் அவர் எழுதிய கடிதத்தில், காந்தி, நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணா, உள்ளிட்ட தலைவர்களின் கனவை நனவாக்க வேண்டும் என்று நம்பிக்கை கொண்டவர்கள் அரசியல் கட்சிகளையும் தாண்டி தன்னை ஆதரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதைதொடர்ந்து துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளராக வெங்கையா நாயுடுவை அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அறிவித்தார்.
இதையடுத்து துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவை ஜூலை 18 ஆம் தேதி கோபால கிருஷ்ண காந்தியும் வெங்கையா நாயுடுவும் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், இன்று பிரதமரை சந்தித்த ஒபிஎஸ் வெங்கையா நாயுடுவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.