உளுந்தூர்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அன்னை சத்யா தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். 60 வயதான இவர் வாடகை கார் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். எம்.ஜி.ஆர். காலம் முதலே அ.தி.மு.க.,வில் இணைந்து தீவிர தொண்டனாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி ஆறுமுகம் தீவைத்துக்கொண்டார்.
இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் 90 சதவிகித தீக்காயம் இருந்ததால் மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தீக்குளித்த ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இது பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
