திட்டமிட்டு ஓ.பன்னீர்செல்வம் அவமதிப்பு... ஓபிஎஸ் ஆதரவாளர் பகீர் குற்றச்சாட்டு!!
பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திட்டமிட்டே அவமதித்ததாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.
பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திட்டமிட்டே அவமதித்ததாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை பூதாகரமாக மாறியுள்ளது. இந்த நிலையில், சென்னை வானகரத்தில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப் படுவதாகவும் மீண்டும் ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடும் என்றும் அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார். இதனிடையே தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கம், அவைத்தலைவராக தமிழ் மகன் உசேனனை நியமித்தது செல்லாது எனவும், ஒருங்கிணைப்பாளரின் அனுமதியின்றி 23 தீர்மானங்களையும் நிராகரித்தது சட்ட விரோதமானது எனவும் கூறினார். இதனையே இன்று நன்பகலில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அதிமுக ஒருங்கிணைப்பாளர்களின் பதவி காலாவதியாகிவிட்டதாக கூறினார். இவ்வாறு தொடர்ந்து உட்கட்சி பிரச்சனை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திட்டமிட்டே அவமதித்ததாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுக்குழுவில் திட்டமிட்டு ஓ.பன்னீர்செல்வத்தை அவமதித்தனர் எனவும், ஓ.பன்னீர்செல்வம் பேசியபோது பாதியில் மைக்கை ஆப் செய்தனர் என்றும் குற்றம்சாட்டினார். ஒற்றை தலைமை என ஏற்கனவே கூறியதை பொதுக்குழுவில் ஒப்பித்தனர் எனவும், பொதுக்குழுவில் எங்களை கண்ணியமாக நடத்தினார்களா? என்பதை நாடே அறியும் எனவும் கூறினார். அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் கட்சிகள் அல்ல, அது தொண்டர்களின் கட்சி என்றும் நிர்வாகிகள் பழனிச்சாமி பக்கமும், தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வம் பக்கமும் உள்ளனர் எனவும் தெரிவித்தார்.