ops says that decision will be made on two days

அதிமுக இணைப்பு குறித்து பரபரப்பாக பேசபட்டு வருகிறது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற நாள் முதலே ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்க வேண்டும் என ஒபிஎஸ் முழக்கமிட்டு வருகிறார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதனால் நீண்ட நாட்களாக இழுத்தடித்து வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் திடீரென ஜெ மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் எனவும் ஜெ வீடு நினைவு இல்லமாக மாற்றப்படும் எனவும் தெரிவித்தார். 

இதையடுத்து அணிகள் இணைப்பு குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் என்று ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

அதன்படி சென்னையில் நேற்று ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதே போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். 

இதையடுத்து ஜெ சமாதியில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டன. காரணம் பிரிந்த இடத்திலேயே ஒன்று சேர உள்ளதாக தகவல் வெளியாகியது. 

நேற்று மாலை 7.30 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வமும் ஜெயலலிதா நினைவிடத்தில் இணைந்து அதிமுக இணைப்பு குறித்த தகவலை வெளியிடுவதாக தகவல் வெளியாகியது.

ஆனால் அவர்கள் வராததைகண்டு காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து செல்கின்றனர். ஜெயலலிதா நினைவிடத்தில் இருந்த எம்எல்ஏக்கள் அதிமுக நிர்வாகிகளும் புறப்பட்டனர்.

இந்நிலையில், சென்னை கிரீன்வேல்ஸ் இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தமது நிர்வாகிகளுடன் மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டார். 

இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஒபிஎஸ், இணைப்பு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாகவும், அணிகள் இணைப்பு விவகாரத்தில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், இணைப்பு குறித்து ஓரிரு தினங்களில் நல்ல முடிவு எட்டப்படும் எனவும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.