ops pressmeet in venus colony
ஆர்,கே.நகர் இடைத்தேர்தலில் நன்கு உழைத்து வெற்றி பெற்று சசிகலா தரப்பை அரசியலில் இருந்தது அப்புறப்படுத்த வேண்டும் என கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஓபிஎஸ் தெரிவித்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் இல்லத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அடுத்த மாதம் 12 ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை எப்படி சந்திப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது நிர்வாகிகளிடையே பேசிய ஓபிஎஸ், கடந்த 24 ஆம் தேதி ஆர்.கே.நகரில் நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது கூடிய கூட்டம் அ.தி.மு.க.,வின் பெரும்பாலான தொண்டர்கள் நம்மிடம்தான் உள்ளனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்திருந்தது என கூறினார்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு தொகுதிக்குள் இருக்கும் கட்சி நிர்வாகிகள் பலரையும், தங்கள் பக்கம் கொண்டு செல்ல, பல லட்சங்களை அலட்சியமாக சசிகலா தரப்பினர் செலவு செய்ததாகவும் ,பணம் வாங்கிச் சென்ற யாராலும், அதை செய்ய முடியவில்லை எனவும் தெரிவித்தார்.
ஆர்,கே.நகர் தொகுதியில் 32 அமைச்சர்களையும், களம் இறக்கி, அதிகார துஷ்பிரயோகம் செய்து, மக்களை விலைக்கு வாங்க சசிகலா தரப்பினர் திட்டம் போடுவார்கள் என ஓபிஎஸ் எச்சரித்தார்.

சசிகலா தரப்பின் அத்தகைய முயற்சிகளை முறியடிப்பதோடு மட்டுமல்லாமல் தி.மு.க.,வையும் சேர்த்து முறியடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஜெ.வின் அண்ணன் மகள் தீபா தேர்தலில் நின்றால் அவரை விமர்சிக்க வேண்டாம் என தெரிவித்த ஓபிஎஸ் முடிந்த வரையில், அவரை இணைத்துக் கொண்டே தேர்தலை சந்திக்க முயற்சிக்க வேண்டும் என தெரிவித்தார்.

நமது ஒரே இலக்கு இந்த இடைத் தேர்தலோடு சசிகலா தரப்பை, அரசியலில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும் என்றும் ஓபிஎஸ் கூறினார்.
அதே போல் அதிமுக வின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டால் இரட்டை இலைச் சின்னம் நம் கைக்கு வந்துவிடும் என்றும் ஓபிஎஸ் நம்பிக்கை தெரிவித்தார்.
